கர்நாடகா மட்டுமில்லை, பிசிசிஐயும் மதிக்கவில்லை! கடவுள் மாதிரி நடக்காதீர்கள்.. சீறிய சுப்ரீம்கோர்ட்
டெல்லி: கடவுள் மாதிரி நடந்து கொள்ளாமல் லோதா கமிட்டி பரிந்துரையை ஏற்று செயல்படுத்துங்கள் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு குட்டு வைத்துள்ளது உச்சநீதிமன்றம்.
ஐபிஎல் சூதாட்டம் குறித்து விசாரித்த ஓய்வு பெற்ற நீதிபதி லோதா தலைமையிலான கமிட்டி பிசிசிஐ அமைப்பை சீர் செய்ய பல்வேறு பரிந்துரைகளை சமர்ப்பித்தது. இந்த பரிந்துரைகளை செயல்படுத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

ஆனால் துரும்பையும் கிள்ளி போட தயாராக இல்லை பிசிசிஐ. அதிகார சுகம் கண்டவர்களால் லோதா கமிட்டி அறிக்கையை செயல்படுத்தி அதிகாரத்தை இழக்க விருப்பமில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், லோதா கமிட்டி இன்று சுப்ரீம்கோர்ட்டை அணுகி, உத்தரவை செயல்படுத்தாத பிசிசிஐயின் மெத்தனத்தை தோலுரித்தது. பிசிசிஐ தலைமையிலுள்ள அதிகாரிகள் அனைவரையும் டிஸ்மிஸ் செய்ய லோதா கமிட்டி வேண்டுகோள்விடுத்தது.
இதையடுத்து பிசிசிஐக்கு கண்டனம் தெரிவித்த சுப்ரீம் கோர்ட், பிசிசிஐ கடவுளை போல நடந்து கொள்ள வேண்டாம், ஒழுங்காக விதிமுறைக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவை நீங்கள் மதிக்கவில்லை என்றால், உத்தரவை எப்படி செயல்படுத்த வைப்பது என்று நீதிமன்றத்திற்கு தெரியும். உங்களை நேர் வழியில் கொண்டுவர உரிய உத்தரவுகளை பிறப்பிப்போம். இவ்வாறு நீதிமன்றம் கூறியது.
காவிரியில் தண்ணீர் திறந்துவிட சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்ட பிறகும், கர்நாடகா தொடர்ந்து தண்ணீர் திறக்காமல் இழுத்தடித்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications