விளையாட சென்ற 6 வயது சிறுவனை 6 வெறிநாய்கள் கடித்து கொன்றதால் பரபரப்பு
போபால்: மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் விளையாடி கொண்டிருந்த 6 வயது சிறுவனை வெறி பிடித்த 6 நாய்கள் கடித்து கொன்றன.
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ளது ஆவாத்புரி. இங்குள்ள சிவராம் நகரில் வசித்து வந்தவர் சஞ்சு (6). இந்த சிறுவன் தனது வீட்டு அருகே 300 மீட்டர் தூரத்தில் உள்ள திறந்தவெளி மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தான்.
இந்த நிலையில் சஞ்சுவின் தாய்க்கு கடந்த மாதம் குழந்தை பிறந்துள்ளது. அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்ததால் அவர் வீட்டில் ஓய்வு இருந்து வந்துள்ளார்.
வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பிய அவரது கணவர், சஞ்சு எங்கே என கேட்டுள்ளார். அதற்கு அந்த பெண் அவன் வெளியே விளையாடி கொண்டிருக்கிறான். நான் போய் அழைத்து வருகிறேன் என வெளியே வந்தார் சஞ்சுவின் தாய்.
எக்கோ பிரெண்ட்லி வாகன எஞ்சின் கண்டுபிடிப்பு.. தமிழர் அசத்தல் சாதனை.. கவுரவப்படுத்திய ஜப்பான்
அப்போது அவரது மகனை சுற்றி 6 வெறி நாய்கள் இருந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் மீண்டும் தனது வீட்டுக்கு வந்து அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்துள்ளார். அப்போது அங்கு சென்று பார்த்தபோது சிறுவன் எந்த அசைவும் இன்றி படுத்து கிடந்தார்.
உடனடியாக அந்த சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றதில் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர். இதையடுத்து அப்பகுதியில் அதிகரித்து வரும் வெறிநாய்களை கட்டுப்படுத்த நகராட்சி எந்த பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுக்காதது குறித்து மக்கள் கண்டனம் தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு கோகுல்தாம் என்ற பகுதியில் வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுவனை ஏராளமான வெறிநாய்கள் கடித்ததால் அவர் படுகாயமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.