நன்கொடையை வங்கிகளில் டெபாசிட் செய்ய அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் கமிஷன் அதிரடி உத்தரவு!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: அரசியல் அரசியல் கட்சிகள் ரொக்கமாக பெறுகிற நன்கொடை பணத்தை வங்கியில்தான் டெபாசிட் செய்ய வேண்டும் என்று தேர்தல் கமிஷன் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
அரசியல் கட்சிகளின் நிதி நிர்வாகத்தில்- குறிப்பாக நிதி வழங்குதல், தேர்தல் செலவினம் போன்றவற்றில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வருவதற்கு தேவையான விதிமுறைகளை அமல்படுத்தும் அதிகாரத்தை தேர்தல் கமிஷனுக்கு இந்திய அரசியல் சாசன சட்டம் பிரிவு 324 வழங்கி உள்ளது.

இதன்படி தேர்தல் கமிஷன் சில விதிமுறைகளை வகுத்து கடந்த ஆகஸ்டு மாதம் 29-ந் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவுகள் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளன. அதன் முக்கிய அம்சங்கள்:
- கட்சியின் அனைத்து மாநில அமைப்புகளும், அடிமட்ட அமைப்புகளும் வங்கிக்கணக்கினை பராமரிப்பதையும், கட்சியின் மத்திய தலைமை அலுவலகத்தில் தொகுக்கப்பட்ட கணக்குகளை பராமரிப்பதையும் ஒரு (தேசிய) கட்சியின் பொருளாளர் உறுதி செய்ய வேண்டும்.
- அரசியல் கட்சியின் நிதி கணக்குகள், தணிக்கை போன்றவற்றில் இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனத்தின் வழிகாட்டும் குறிப்பினை பொருளாளர் பராமரித்து வருகிற கணக்குகள் உறுதி செய்ய வேண்டும்.
- வருமான வரிச்சட்டத்தின்கீழ், ஆண்டு கணக்குகள் ஆடிட்டரால் தணிக்கை செய்து, சான்று அளிக்கப்பட வேண்டும்.
- ரொக்கமாக எந்தவொரு தனிப்பட்ட நபருக்கும் அல்லது நிறுவனத்துக்கும் ரூ.20 ஆயிரத்துக்கு அதிகமாக அளிக்கக்கூடாது.
- வங்கி இல்லாத கிராமங்களை சேர்ந்தவர்களுக்கு, நிறுவனங்களுக்கு கொடுப்பதில் விதிவிலக்கு உண்டு.
- அதே போன்று ஊழியர் அல்லது கட்சி நிர்வாகியின் சம்பளம், ஓய்வூதியம், செலவு செய்த தொகையை ஈடுகட்டல் போன்றவற்றுக்கும் இந்த விதிமுறை பொருந்தாது.
- வேட்பாளர்களின் தேர்தல் செலவு குறித்து மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் உச்சவரம்பினை நிர்ணயித்துள்ளது. அரசியல் கட்சிகள் வழங்குகிற நிதி, நிர்ணயிக்கப்பட்ட உச்சவரம்பைக்காட்டிலும் அதிகமாக இருக்கக்கூடாது. அந்த நிதி உதவியும் கோடிட்ட காசோலை, டிராப்ட், வங்கி கணக்கில் நேரடி மாற்றம் மூலமே வழங்கப்பட வேண்டுமே தவிர ரொக்கமாக அல்ல.
- அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், இப்படி பங்களிப்பு செய்வது தொடர்பான அறிக்கையினை ‘24 ஏ' பாரத்தில் நிரப்பி அளிக்க வேண்டும். ஆடிட்டரால் தணிக்கை செய்து சான்றளிக்கப்பட்ட ஆண்டு கணக்கு, தேர்தல் செலவின கணக்கு ஆகியவை தேர்தல் கமிஷனிடம் தாக்கல் செய்யப்பட வேண்டும்.
- அங்கீகரிக்கப்படாத கட்சிகள், அவற்றை மாநில தலைமை தேர்தல் அதிகாரியிடம் அளிக்க வேண்டும்.
- அரசியல் கட்சிகள் தங்களுக்கு தனிப்பட்ட நபர்கள், நிறுவனங்கள் நன்கொடைகள் வழங்குகிறபோது, அவர்களின் பெயர்கள், முகவரிகளை பராமரித்து வரவேண்டும்.
- ரொக்கமாக நன்கொடை பெற்றால், அதை அரசியல் கட்சிகள் ஒரு வார காலத்தில் டெபாசிட் செய்து, கணக்கில் சேர்த்துவிட வேண்டும்.
- இருப்பினும் ஒரு குறிப்பிட்ட தொகையினை அரசியல் கட்சிகள் தங்களது அன்றாட செலவுகளுக்காக கையில் வைத்துக்கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications