அடுத்து ம.பி-இல் கிளம்பிய ஹிஜாப் சர்ச்சை! வகுப்பிற்குள் தொழுகை நடத்தியதாக புகார்! முழு பின்னணி
போபால்: கர்நாடகாவில் இப்போது தான் ஹிஜாப் சர்ச்சை ஓய்ந்துள்ள நிலையில், இப்போது மத்தியப் பிரதேசத்தில் புதிதாக ஹிஜாப் சர்ச்சை வெடித்துள்ளது.
அண்டை மாநிலமான கர்நாடகாவில் கடந்த டிசம்பர் இறுதியில் ஹிஜாப் சர்ச்சை எழுந்தது. அங்குள்ள பள்ளிகள் மற்றும் பியூ கல்லூரிகளில் மாணவிகள் ஹிஜாப் அணியத் தடை விதிக்கப்பட்டது.
இது தொடர்பான வழக்கில் கர்நாடக ஐகோர்ட்டும் ஹிஜாப் அணியத் தடை விதித்ததும், மாணவ- மாணவிகள் அனைவரும் பள்ளி சீருடையை மட்டுமே அணிய வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இதை எதிர்த்து மேல்முறையீடும் செய்யப்பட்டுள்ளது.

மத்திய பிரதேசம்
இந்தச் சூழலில் தற்போது மத்தியப் பிரதேச மாநிலத்திலும் ஹிஜாப் விவகாரம் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. மத்தியப் பிரதேச பல்கலைக்கழகத்தில் முஸ்லிம் மாணவி ஒருவர் ஹிஜாப் அணிந்து தொழுகை நடத்துவது போன்ற வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. சமூக ஊடகங்களில் பலராலும் பகிரப்படும் இந்த வீடியோ, அங்குள்ள டாக்டர் ஹரிசிங் கவுர் சாகர் பல்கலைக்கழகத்தின் பதிவு செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இந்து ஜாக்ரன் மஞ்ச் என்ற வலதுசாரிக் குழு, மாணவிக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பல்கலைக்கழக நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளது.

விசாரணைக்கு உத்தரவு
அதன் அடிப்படையில் இது தொடர்பாகப் பல்கலைக்கழகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பல்கலைக்கழக துணைவேந்தர் நீலிமா குப்தா கூறுகையில், "இது குறித்து விசாரிக்கக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவர்கள் தங்கள் மத வழிபாடுகளை வீட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். பல்கலைக்கழகம் என்பது படிப்பதற்காக இடம் என்பதை அனைவரும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஆடைக்கட்டுப்பாடு?
இந்தச் சம்பவம் தொடர்பாகப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் சந்தோஷ் சகௌரா கூறுகையில், "ஹிஜாப் அணிந்த மாணவி வகுப்பறைக்குள் தொழுகை நடத்தும் வீடியோ தொடர்பான புகார் கிடைத்துள்ளது. இது தொடர்பாக விசாரணைக்கு அமைக்கப்பட்டுள்ள ஐவர் குழு மூன்று நாட்களுக்குள் அறிக்கையைச் சமர்ப்பிக்கும், அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினார். பல்கலைக்கழக வளாகத்தில் ஆடை தொடர்பான விதிகள் இல்லை என்றாலும் கூட, அடிப்படை நெறிமுறைகளின்படி ஆடை அணிந்து வகுப்புகளில் கலந்து கொள்ள வேண்டும் என்று பல்கலைக்கழகத்தின் ஊடக அதிகாரி விவேக் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.

புகார்
இந்தச் சம்பவம் தொடர்பாக இந்து ஜாக்ரன் மஞ்சின் சாகர் பிரிவு தலைவர் உமேஷ் சரஃப் கூறுகையில், "அந்த மாணவி நீண்ட காலமாக ஹிஜாப் அணிந்து வகுப்புகளில் கலந்து கொண்டுள்ளார். கல்வி நிறுவனங்களில் இதுபோன்ற மத நடவடிக்கைகளை அனுமதிக்கக் கூடாது. அவர் நீண்ட காலமாக ஹிஜாப் அணிந்து வருகிறார், ஆனால் அவர் வெள்ளிக்கிழமை மதியம் வகுப்பறைக்குள்ளேயே தொழுகை நடத்தினார். கல்வி நிறுவனங்கள் அனைத்து மதங்களுக்கும் இடமாக இருப்பதால் இது ஆட்சேபனைக்குரியது என்பதால் புகார் அளித்துள்ளோம்" என்றார்.

கர்நாடக விவகாரம்
முஸ்லீம் மாணவிகள் சார்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரித்து ராஜ் தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கியது. அதில் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும் என்று தெரிவித்தனர். மேலும், ஹிஜாப் என்பது இஸ்லாமியச் சட்டத்தில் அத்தியாவசிய விஷயமல்ல என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.












Click it and Unblock the Notifications