'வியாபம்'... மாணவர்களை அரசு தரப்பு சாட்சிகளாக சேர்க்க திக்விஜய்சிங் கோரிக்கை
டெல்லி: மத்திய பிரதேச பாரதிய ஜனதா அரசு மீதான வியாபம் ஊழல் முறைகேட்டை சி.பி.ஐ. விசாரணைக்கு உச்சநீதிமன்றம் மாற்றியுள்ள நிலையில், சிறையில் உள்ள மாணவர்களை அரசுத் தரப்பு சாட்சிகளாக சேர்க்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய்சிங் வலியுறுத்தியுள்ளார்.
மத்திய பிரதேசத்தில் அரசு தேர்வு வாரியமான 'வியாபம்' மூலம் முறைகேடான வகையில் ஆயிரக்கணக்கானோர் பணி நியமனம் பெற்ற ஊழல் நாட்டையே உலுக்கி வருகிறது. இந்த ஊழல் வழக்கில் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் வியாபம் முறைகேட்டில் சிக்கிய 47 பேர் மர்மமான முறையில் மரணமடைந்தனர். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு பெரும் போராட்டங்களுக்குப் பின்னர் தற்போது சி.பி.ஐ. வசம் கைமாறியது.
இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய்சிங் கூறுகையில், வியாபம் ஊழல் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு உச்சநீதிமன்றம் மாற்றியுள்ளது. இதற்கு அப்பால் இந்த வழக்கில் சிறையில் உள்ள மாணவர்களை அரசுத் தரப்பு சாட்சிகளாக சேர்க்க வேண்டும்.
அப்போதுதான் ஊழல் அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் உள்ள தொடர்பும் அம்பலமாகும். ஸ்பெக்ட்ரம் ஊழலைவிட மிக பயங்கரமான ஊழலாக இது இருக்கிறது. மத்தியில் ஆளும் பாரதிய ஜனதாவைப் பொறுத்தவரையில் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்ட ஆளுநர்களையெல்லாம் தக்க வைத்துக் கொள்கிறது. ஆனால் எஃப்.ஐ.ஆர். இல்லாத ஆளுநர்களையெல்லாம் தக்க வைத்துக் கொள்கிறது.
இவ்வாறு திக்விஜய்சிங் கூறினார்.
மத்திய பிரதேச பாரதிய ஜனதா அரசு மீதான வியாபம் ஊழல் முறைகேட்டை சி.பி.ஐ. விசாரணைக்கு உச்சநீதிமன்றம் மாற்றியுள்ள நிலையில், சிறையில் உள்ள மாணவர்களை அரசுத் தரப்பு சாட்சிகளாக சேர்க்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய்சிங் வலியுறுத்தியுள்ளார்.