சஸ்பெண்ட் ரத்து உத்தரவால் பலனில்லை.. ஹைதராபாத் பல்கலை. மாணவர் போராட்டம் தொடர்கிறது
ஹைதராபாத்: தலித் மாணவர்களின் சஸ்பெண்ட் தண்டனையை ஹைதராபாத் பல்கலைக்கழகம் நீக்கிய பிறகும், ரோகித் வெமுலா தற்கொலைக்கு நியாயம் கேட்டு அங்கு, சக மாணவர்களின் போராட்டம் தொடருகிறது. மாணவர்கள் போராட்டத்தை பரவவிடாமல் தடுக்க பல்கலைக்கழகம், மற்றும் ஹாஸ்டல்களில் இணையதள சேவை முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.
ஏபிவிபி மாணவர் அமைப்பு நிர்வாகிகளை தாக்கிய பிரச்சினையில், அம்பேத்கர் மாணவர் அமைப்பை சேர்ந்த ரோகித் வெமுலா உள்ளிட்ட 5 மாணவர்களை பல்கலைக்கழக நிர்வாகம் சஸ்பெண்ட் செய்திருந்தது.

இந்த நடவடிக்கையால் மனமுடைந்த ரோகித், விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்தார். இந்த சம்பவத்தை, தலித் மாணவர்களுக்கு எதிரான அணுகுமுறை என கண்டித்துள்ள எதிர்க்கட்சிகள், ரோகித்திற்கு ஆதரவாக நடைபெறும் மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு அளித்து வருகிறது.
இந்நிலையில், போராட்டத்தை தவிர்க்கும் நோக்கத்தில், ரோகித்தோடு சேர்த்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட 4 தலித் மாணவர்களின் தண்டனையை பல்கலைக்கழகம் நேற்று ரத்து செய்தது. ஆயினும், பல்கலைக்கழக துணை வேந்தர் தனது பதவியை ராஜினாமா செய்யும்வரை போராட்டம் தொடரும் என மாணவர்கள் அறிவித்து, இரவு-பகலாக பல்கலை. வளாகத்தில் போராட்டத்தை தொடருகிறார்கள்.
மாணவர் போராட்டம் பரவுவதை தடுக்கும் நோக்கில், பல்கலைக்கழகத்தில் வைஃபை உட்பட அனைத்து வகை இணையதள சேவைகளையும் முடக்கியுள்ளனர் நிர்வாகத்தினர். எனவே, செய்தி சேகரிக்க செல்லும் பத்திரிகையாளர்களிடம் இணையதள டோங்கல்களை பெற்று மாணவர்கள் பயன்படுத்திவருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications