டெல்லி பெண்ணை பலாத்காரம் செய்த பெங்களூர் சப்-இன்ஸ்பெக்டருக்கு வலை
பெங்களூர்: ஏற்கனவே திருமணமானதை மறைத்துவிட்டு இளம் பெண்ணுடன் லிவ்விங் டுகெதர் வாழ்க்கை நடத்திய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை பலாத்கார வழக்கின்கீழ் கைது செய்ய காவல்துறை வலைவீசி தேடிவருகிறது. இந்த சம்பவம் கர்நாடக காவல் துறை மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாரில் பழக்கம்
பெங்களூர் கப்பன்பார்க் காவல் நிலையத்தில் டிராபிக் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றுபவர் தனஞ்சயா. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எம்.ஜி.ரோடு பகுதியிலுள்ள மதுபான பப் ஒன்றில் வேலை பார்த்த டெல்லியை சேர்ந்த 28 வயது பெண், சுவாதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனஞ்சயாவுக்கு பழக்கமாகினார். வழக்கு விசாரணை ஒன்றுக்காக பப்புக்கு சென்றபோது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

ஒரே வீட்டில் வாழ்க்கை
இந்த பழக்கம் காதலாக மாறியது. இந்திராநகர் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு சுவாதியுடன், தனஞ்சயா லிவ்விங் டுகெதர் வாழ்க்கை நடத்தியுள்ளார். இந்நிலையில் தனஞ்சயா ஏற்கனவே திருமணமானவர் என்ற தகவல் சுவாதிக்கு எதேர்ச்சையாக தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த சுவாதி, தன்னை திருமணம் செய்யுமாறு வற்புறுத்தியுள்ளார்.

ரிவால்வருடன் எஸ்கேப்..
ஆனால் தனஞ்சயா திருமணம் செய்ய மறுத்ததால், ஆத்திரமடைந்த சுவாதி, இத்தனை நாட்களாக நம்பிக்கை மோசடி செய்ததற்காக ரூ.10 லட்சத்தை கொடுங்கள் என்று கேட்டுள்ளார். இதற்கும் மறுப்பு தெரிவித்த தனஞ்சயா, நாம் இப்படியே ஒன்றாக உல்லாசமாக இருப்போம் என்று கூறியுள்ளார். இதற்கு மேலும் தனஞ்சயாவை நம்பினால் வேலை நடக்காது என்பதை தெரிந்துகொண்ட சுவாதி, தனஞ்சயாவின் ரிவால்வர் மற்றும், வாக்கி-டாக்கியை தூக்கிக்கொண்டு டெல்லிக்கு தப்பியோடிவிட்டாராம்.

ரகசிய திருமணம்..
ரிவால்வரும், வாக்கி டாக்கியும் இல்லாவிட்டால் மேலிடத்தில் பதில் சொல்ல முடியாது என்பதால் சுவாதியை தேடி மார்ச் 27ம்தேதி தனஞ்சயா டெல்லி சென்றுள்ளார். அங்கு மால்வியா நகர் பகுதியில் உள்ள சுவாதி வீட்டில் வைத்து பஞ்சாயத்து பேசப்பட்டுள்ளது. இதையடுத்து திருமணம் செய்துகொள்ள ஒப்புக்கொண்டு கமுக்கமாக, சுவாவதிக்கு தாலி கட்டியுள்ளார். இதன்பிறகு தனது பொருட்களை வாங்கிக்கொண்டு பெங்களூர் வந்த தனஞ்சயா அதன்பிறகு சுவாதியிடம் பேசவில்லை.

பலாத்கார வழக்கு
ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சுவாதி மால்வியா நகர் காவல் நிலையத்தில், பலாத்காரம், ஏமாற்று உள்ளிட்ட பிரிவுகளில் தனஞ்சயாவுக்கு எதிராக புகார் அளித்தார். இதையடுத்து டெல்லி போலீஸ் படை பெங்களூர் வந்துள்ளது. ஆனால், அதற்கு்ள், தனஞ்சயா தலைமறைவாகிவிட்டார்.

வலை வீச்சு
இந்திராநகர் காவல் நிலையத்தில் இருந்து கடந்த மாதம் 24ம்தேதிதான் கப்பன்பார்க் டிராபிக் காவல் நிலையத்துக்கு தனஞ்சயாவை பணியிடமாற்றம் செய்துள்ளனர். ஆனால் அதன்பிறகு புதிய காவல் நிலையத்தில் இதுவரை தனஞ்சயா பொறுப்பேற்கவில்லை. டெல்லி போலீசார் கர்நாடக போலீசார் உதவியுடன் தனஞ்சயாவை வலைவீசி தேடிவருகிறார்கள்.












Click it and Unblock the Notifications