சு.சுவாமியின் எச்சரிக்கையை கண்டுகொள்ளாமல், 'ரபேல்' விமான கொள்முதலுக்கு ஒப்பந்தம் செய்த மோடி!
டெல்லி: பிரான்ஸ் நாட்டுடன் ரபேல் விமானம் தொடர்பாக ஒப்பந்தம் போடப்பட்டால், வழக்கு தொடருவேன் என்று பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி கூறியிருந்த நிலையில், பிரதமர், நரேந்திரமோடி, அந்த ஒப்பந்தத்தை தொடர முடிவு செய்துள்ளார். எனவே, பிரதமர் மீது சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடர தயாராக உள்ளாரா என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
பாஜ தேசிய செயற்குழு உறுப்பினர்களில் ஒருவரான சுப்பிரமணிய சுவாமி, ரபேல் விமான ஒப்பந்தத்தை தொடரக்கூடாது என பிரதமர் நரேந்திர மோடியை கேட்டுக் கொண்டார்.

ரபேல் வேண்டாம்
நேற்று முன்தினம் அவர் அளித்த பேட்டி ஒன்றில், ஐமு கூட்டணி ஆட்சிக் காலத்தில் போடப்பட்ட இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றக்கூடாது. பிரான்ஸ் போர் விமானங்களின் செயல்பாடுகள் மோசமானதாக இருப்பது லிபியா, எகிப்தில் நிரூபணமாகி உள்ளது.

வழக்கு தொடர எச்சரிக்கை
எனவே, பிரான்ஸ் பயணத்தில் ஒருவேளை இது தொடர்பான ஒப்பந்தம் முடிவு செய்யப்பட்டால், நீதிமன்றத்தில் வழக்கு தொடருவதை தவிர வேறுவழியில்லை என்று கூறியிருந்தார். பாஜகவில் சுப்பிரமணியன் சுவாமிக்கு செல்வாக்கு இருப்பதாக கூறப்படும் நிலையில், அவரது பேச்சை பிரதமர் ஏற்பாரா என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

மோடி ஒப்பந்தம்
இந்நிலையில் 36 ரபேல் விமானங்களை வாங்க பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார். பிரான்சில் சுற்றுப்பயணம் செய்துள்ள மோடி முன்னிலையில், இதற்கான ஒப்பந்தங்களுக்கு கையெழுத்திடப்பட்டன.

திக்விஜய் சிங் சீண்டல்
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் தனது ட்விட்டரில், "ரபேல் விமானத்தை வாங்குவது தொடர்பாக சுப்பிரமணிய சுவாமி நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும்" என்று கூறியுள்ளார்.

மீன் கடையில் மனோகர் பாரிக்கர்
இதனிடையே, பிரான்சில் பிரதமர் விமானம் வாங்க ஒப்பந்தம் செய்யும் சமயத்தில், கோவாவில், பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர், அரசு மீன் கடை திறப்பு விழாவில் பங்கேற்றதை எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன. பாதுகாப்பு விஷயத்தில் பாரிக்கர் மெத்தனமாக இருப்பதாக எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.












Click it and Unblock the Notifications