அப்சல்குருவை தூக்கிலிட்டபோது ஏன் ப.சி. வாய் திறக்கவில்லை? தேசதுரோக வழக்கு போடுங்க...இது சாமி
டெல்லி: நாடாளுமன்றத் தாக்குதல் குற்றவாளி அப்சல்குருவை தூக்கிலிட்ட போது முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் ஏன் வாயே திறக்கவில்லை? மத்திய அரசை கவிழ்க்கும் வகையில் தற்போது மக்களைத் தூண்டிவிடும் ப.சிதம்பரம் மீது தேசத் துரோக வழக்கு போட வேண்டும் என்று பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
2001-ம் ஆண்டு நாடாளுமன்றம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதல் வழக்கில் 2013-ம் ஆண்டு அப்சல்குரு தூக்கிலிடப்பட்டார்.

அப்சல் குரு தூக்கிலிடப்பட்ட நாளில் டெல்லி ஜஹவர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் அவருக்கு ஆதரவாக நிகழ்ச்சிகள் நடத்தப் போய் பெரும் களேபரம் ஏற்பட்டுள்ளது. மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமார் உள்ளிட்டோர் மீது தேசத் துரோக வழக்கு போடப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக பேட்டியளித்திருந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், தனிப்பட்ட கருத்தாக அப்சல்குருவுக்கு நாடாளுமன்றத் தாக்குதலில் தொடர்பிருக்குமா? என சந்தேகம் எழுப்பியிருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ப.சிதம்பரத்தின் கருத்தை விமர்சித்து பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி கூறியதாவது:
எந்த நோக்கத்துக்காக ப.சிதம்பரம் இப்படி சொன்னார் என்பது ஆச்சரியாம இருக்கிறது..... அவரை அறிக்கை தருமாறு கேட்டுக் கொள்ளாமல் இப்படியான முட்டாள்தனமான அறிக்கைகளைக் கொடுக்கமாட்டார்...
இது தீவிரவாதிகளுக்கு ஊக்கமளிக்கும் நடவடிக்கை. ஜம்மு காஷ்மீரில் மோசமான எதிர் விளைவுகளை ஏற்படுத்தும். ப.சிதம்பரம் எதற்காக இத்தனை ஆண்டுகாலம் காத்திருந்தார்...
அப்சல்குரு தூக்கிலிட்டபோது முந்தைய அரசில் அமைச்சராகத்தானே இருந்தார்...அப்போது ஏன் வாயைத் திறக்கவில்லை.... அப்சல்குரு உடலை குடும்பத்திடம் ஒப்படைக்கக் கூடாது என மத்திய அரசு முடிவெடுத்தபோதும் அவர் வாயைத் திறக்கவில்லை.
ப.சிதம்பரத்தின் இந்த பேச்சு தேசத் துரோகமாகும். அவர் மீது தேசத் துரோக பிரிவான 124-Aன் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications