வைகோவை பாஜக கூட்டணியிலிருந்து நீக்க வேண்டும் (இன்னுமா இருக்காரு?!) - சு சாமி
டெல்லி: தமிழகத்தில் பாஜக கூட்டணியிலிருந்து வைகோவை நீக்க வேண்டும் என்று சுப்பிரமணிய சாமி கூறியுள்ளார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்தது வைகோவின் மதிமுக. பெரும் தோல்வியைத் தழுவியது. தேர்தலுக்குப் பின் மோடியின் தலைமையில் பாஜக அரசு அமைந்த பிறகு, இலங்கை தமிழர்கள் விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டை கடுமையாக எதிர்த்து வருகிறார்.
சிங்கள அரசுடன் நல்லுறவைப் பேணுவதற்காக மோடி அரசு தமிழர்களை பலியாக்கப் பார்க்கிறது என பகிரங்கமாக விமர்சித்துள்ளார்.

மேலும் பாஜக கூட்டணியில் இனியும் தொடர முடியாது என்ற நிலைப்பாட்டுக்கு வைகோ வந்துவிட்டார்.
இந்த நிலையில் அவரை பாஜக கூட்டணியிலிருந்து நீக்க சுப்பிரமணிய சாமி கோரியுள்ளார்.
இது குறித்து அவர் விடுத்த அறிக்கையில், "தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அங்கமாக இருந்து வரும் மதிமுக, கூட்டணி தர்மத்தை மீறி விட்டது. அதன் தலைவர் வைகோ கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.
இதுகுறித்து கட்சியின் தலைவர் அமித் ஷாவுக்கும், தமிழக பாஜக பொறுப்பாளர் ராஜிவ் பிரதாப் ரூடியுடனும் பேசப் போகிறேன். மதிமுக தலைவர் வைகோ தேச விரோத மற்றும் பிரிவினைவாதப் போக்கை முன்வைத்துப் பேசி வரும் சூழலில் அக்கட்சி இனியும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர வேண்டுமா என நோட்டீஸ் அனுப்பக் கோரவிருக்கிறேன்," என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications