இட்லி நீ வாடா வாடா.. வடை.. நீ போடா போடா.. விலை ஏறிப் போச்சே.. விசனத்தில் பெங்களூர்வாசிகள்!
பெங்களூரு: இட்லி, தோசை, பொங்கல் என காலை டிபனுக்கு வடைதான் மேட்ச். ஆனால் உளுந்தப்பருப்பு விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளதால் இட்லி, வடைகளில் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. சில ஹோட்டல்களில் வடை சுடுவதையே நிறுத்திவிட்டனராம். ஒரு வடையின் விலை 20 ரூபாயில் இருந்து 25 ரூபாய் வரை உயர்ந்துள்ளதால் வடை பிரியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். வடையின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளதால் காலை டிபனுடன் வடை சாப்பிடுவதையே பலரும் தவிர்த்து வருகின்றனர்.
இந்த ஆண்டு கர்நாடகாவில் பருவ மழை ஏமாற்றிவிட்டது. சரியான அளவு மழையில்லாத காரணத்தால் பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய தானியங்களின் உற்பத்தியில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.பருப்பு வகைகளின் வரத்து இல்லாத காரணத்தால் கர்நாடகாவில் பருப்புகளுக்கு விலை அதிகரித்துள்ளது.

பருப்பு விலை உயர்வு
கடந்த 3 மாதங்களில் பருப்புகளின் விலை தொடர்ந்து பல மடங்கு உயர்ந்து விட்டது. இதனால் தோசை, இட்லி, வடை ஆகியவற்றின் விலையை கர்நாடகா ஓட்டல்காரர்கள் கணிசமான அளவுக்கு உயர்த்தி விட்டனர். பல இடங்களில் விலை உயர்வுக்குப் பதில் வடையின் அளவை சுருக்கிவிட்டனர்.

இட்லி, வடை
2 இட்லி 20 ரூபாய்க்கு விற்கப்பட்டன ஆனால் இப்போது ரூ.10 அதிகரித்து 30 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. பெங்களூர், மைசூர் உள்ளிட்ட நகரங்களில் முன்பு வடை விலை ரூ.15 முதல் ரூ.20 வரை இருந்தது. தற்போது அவற்றின் விலை ரூ.20 முதல் ரூ.25 வரை உயர்ந்து விட்டது.

வடைக்கு டாடா
பெங்களூரில் 3 மாதங்களுக்கு முன்பு வரை ஒரு தோசை ரூ.40-க்கு விற்கப்பட்டது. தற்போது தோசை விலை ரூ.50 ஆக உயர்ந்து விட்டது. உளுந்தப்பருப்பின் விலை உயர்வு காரணமாக ரோட்டோர கையேந்தி ஓட்டல்களில் வடை சுடுவதையே நிறுத்தி விட்டனர்.

விலை உயர்வு அவசியம்
பெரிய ஓட்டல்கள் விலையை உயர்த்தியதால் சிறிய ஓட்டல்காரர்களும் இட்லி, தோசை விலையை உயர்த்தி விட்டனர். இதனால் கர்நாடகா மாநிலம் முழுவதும் உணவுப் பொருட்கள் விலை உயர்ந்துள்ளது. பருப்பு விலை உயர்வினால் இட்லி, தோசை விலையை இப்படி உயர்த்துவதை தவிர எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை என்று ஓட்டல் அதிபர்கள் அறிவித்துள்ளனர்.
வடை பிரியர்களின் பாடுதான் பெரும்பாடாக உள்ளது!












Click it and Unblock the Notifications