'நான் ஈ' வில்லன் நடிகர் சுதீப் விவாகரத்துக்கு விண்ணப்பம்.. ரூ.19 கோடி கொடுத்து செட்டில் செய்கிறார்
பெங்களூர்: நான் ஈ திரைப்பட புகழ் கன்னட நடிகர் சுதீப் தனது மனைவி பிரியாவை விவாகரத்து செய்ய குடும்ப நல நீதிமன்றத்தை நாடியுள்ளார். இத் தம்பதிகளுக்கு 11 வயதில் மகள் உள்ள நிலையில், 14 ஆண்டு கால திருமண வாழ்க்கை முடிவுக்கு வர உள்ளது.
கன்னட திரைப்பட நடிகரான சுதீப், 'நான் ஈ' திரைப்படத்தில் வில்லனாக நடித்து தமிழக மக்களுக்கு ரொம்பவே பரிட்சையமானவர்.
நடிகர்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியின்போது, கன்னட சினிமா நட்சத்திர அணியின் கேப்டனாக செயல்பட்டு, தமிழக அணியோடு உரசல் கொண்டும் பப்ளிசிட்டியானவர் சுதீப். செல்லமாக கூப்பிடப்படுவது கிச்சா சுதீப்.
இவருக்கும் பிரியா என்பவருக்கும் 2001ல் முன்பு திருமணமானது. 11 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்நிலையில், கருத்து வேறுபாட்டால், கடந்த 3 வருடங்களாக பிரியா, கணவரின் ஜே.பி.நகர் வீட்டில் இருந்து பிரிந்து சென்று சர்ஜாப்பூர் சாலையிலுள்ள ஒரு வீட்டில் மகளோடு தனியாக வசித்து வருகிறார்.
விவாகரத்தில் இருவரும் விடாப்பிடியாக இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து குடும்ப நல நீதிமன்றத்தில் சுதீப் தனது மனைவியை விவாகரத்து செய்ய விண்ணப்பித்துள்ளார். அவரது சகோதரி அதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பித்தார்.
தனது மகள் தனது மனைவியோடு வாழ்வதில் ஆட்சேபனையில்லை என்று சுதீப் கூறிவிட்டார். விவாகரத்திற்கு ஈடாக ரூ.19 கோடியை மனைவிக்கு அளிக்கவும் சுதீப் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், பிரியா நடத்தும் ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்திலும் சுதீப் பெரும் முதலீடு செய்திருந்தார்.
விவாகரத்துக்கான காரணத்தை வெளிப்படையாக கூற மறுத்துள்ள சுதீப், அனைவர் வாழ்க்கையிலும், கருத்து வேறுபாடு சகஜம். நண்பர்களுக்கும் கருத்து வேறுபாடு வரத்தான் செய்யும். எனது தனிப்பட்ட வாழ்க்கையை அம்பலப்படுத்த விரும்பவில்லை என்றார்.