சிறையில் இரவு சாப்பிட்ட பிறகு மயங்கி விழுந்த சுதாகரனுக்கு ட்ரிப்ஸ்
பெங்களூர்: பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்ட ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன் சனிக்கிழமை இரவு சாப்பிட்ட சிறிது நேரத்தில் மயங்கி விழுந்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன் பெங்களூர் பரப்பன அக்ரஹாராவில் உள்ள வி.ஐ.பி. அறையில் சனிக்கிழமை இரவு அடைக்கப்பட்டார். இரவு சிறையில் அளிக்கப்பட்ட கேழ்வரகு களி, சாதம், சாம்பார் சாப்பிட்டார் சுதாகரன்.
சாப்பிட்ட சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரை சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்குமாறு தெரிவித்தனர்.
இதையடுத்து சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுதாகரனுக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. அதன் பிறகு உடல் நலம் தேறிய அவர் இன்று காலை மருத்துவமனையில் இருந்து அவரது அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
சுதாகரனுக்கு 4 ஆண்டு தண்டனை தவிர ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.