ஹைதராபாத் மத்திய பல்கலை.யில் சஸ்பென்ட் செய்யப்பட்ட தலித் மாணவர் தற்கொலை- மாணவர்கள் போராட்டம்!!
ஹைதராபாத்: தெலுங்கானாவின் ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழக நிர்வாகத்தால் சஸ்பென்ட் செய்யப்பட்ட தலித் மாணவர் ரோகித் வெமுலா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரோகித் வெமுலாவின் தற்கொலைக்கு காரணமானோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்ததால் ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழக வளாகத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த 28 வயது இளைஞர் ரோகித் வெமுலா. ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழகத்தில் பி.ஹெச்.டி 2 ஆம் ஆண்டு படித்து வந்தார்.

ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழகத்தில் பாரதிய ஜனதாவின் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தியினருடனான மோதலைத் தொடர்ந்து ரோகித் வெமுலா உட்பட 5 தலித் மாணவர்கள் பல்கலைக் கழகத்தில் இருந்து சஸ்பென்ட் செய்யப்பட்டனர். இவர்கள் கடந்த திங்கள்கிழமை பல்கலைக் கழகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து பல்கலைக் கழக வளாகத்திலேயே டெண்ட் அமைத்து தங்களது சஸ்பென்ட் உத்தரவுக்கு எதிரான போராட்டங்களை ரோகித் வெமுலா உள்ளிட்டோர் முன்னெடுத்து வந்தனர்.
ஆனால் பல்கலைக் கழக நிர்வாகம் தங்களது கோரிக்கையை கண்டுகொள்ளாத நிலையில் நேற்று கல்லூரி விடுதியில் நண்பரின் அறையில் தூக்கிலிட்டு ரோகித் வெமுலா தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலைக்கு காரணமாக இருந்த பல்கலைக் கழக நிர்வாகம், இந்துத்துவா மாணவர் அமைப்பினரைக் கண்டித்து பிற பல்கலைக் கழக மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளதால் ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழக வளாகம் பதற்றமாக காட்சியளிக்கிறது.












Click it and Unblock the Notifications