சுனந்தா புஷ்கர் கொலை- சசிதரூரிடம் நாளை டெல்லி போலீஸ் மீண்டும் விசாரணை!
டெல்லி: சுனந்தா புஷ்கர் கொலை தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர் நாளை மீண்டும் விசாரணைக்கு வருமாறு டெல்லி காவல்துறையின் சிறப்பு புலனாய்வுக் குழு இன்று சம்மன் அனுப்பியுள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் டெல்லி ஹோட்டல் அறையில் பிணமாக கிடந்தார். அவரது மரணம் தற்கொலை என்று முதலில் கூறப்பட்டாலும் பின்னர் அது கொலை வழக்காக மாற்றப்பட்டது.

இந்த கொலை வழக்கை விசாரிக்க டெல்லி காவல்துறை சிறப்பு புலனாய்வு குழு அமைத்தது. இக்குழு சசி தரூரின் உதவியாளர் ஆர்.கே.சர்மா, டெல்லி பத்திரிகையாளர் நளினிசிங் உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தியது. இந்த விசாரணைகளின் போது ஐ.பி.எல். போட்டி முறைகேடுகளை அறிந்த சுனந்த அதை அம்பலப்படுத்த திட்டமிட்டிருந்ததாக தெரியவந்தது.
இதனால் இந்த கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டது. இதன் பின் விசாரணைக்கு ஆஜராகுமாறு சசி தரூருக்கு சிறப்பு புலனாய்வு குழு சம்மன் அனுப்பியது. சசி தரூரும் சம்மனை பெற்றுக்கொண்டு புலனாய்வு குழு முன் ஆஜராகி 50-க்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார்.
இதே போல் சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் அமர்சிங்கிடமும் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தியது. அவர் விசாரணையின் போது, சுனந்தா இறப்பதற்கு 2 நாட்களுக்கு முன்பு, தன்னிடம் ஐ.பி.எல். போட்டி சர்ச்சை குறித்து பேசியதாக கூறினார்.
இதனைத் தொடர்ந்து துபாயில் இருந்த சுனந்தாவின் மகன் ஷிவ் மேனனும் விசாரணைக்கு வரவழைக்கப்பட்டார். அவரிடம் சசி தரூருக்கும் சுனந்தாவுக்கும் சுமூகமான உறவு இருந்ததா? என்று விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில் சசி தரூரை நாளை மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு டெல்லி காவல்துறையின் சிறப்பு புலனாய்வுக் குழு இன்று சம்மன் அனுப்பியுள்ளது. இது குறித்து டெல்லி காவல்துறை ஆணையாளர் பாசி இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சசி தரூர் நாளை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பியுள்ளோம். அவரிடம் இருந்து சில சந்தேகங்களுக்கான பதில்களைப் பெற வேண்டியுள்ளது.
சுனந்தாவின் மகன் ஷிவ் மேனனிடம் வாக்குமூலம் பெற்றுள்ளோம் என்று ஏற்கெனவே கூறியுள்ளோம். இதனடிப்படையில் சசி தரூர் மற்றும் அவரது உதவியாளர்கள் உள்ளிட்டோரிடம் மீண்டும் விசாரணை நடத்தப்பட இருக்கிறது. சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணைக்கு சசி தரூர் ஆஜராகிவிட்டால் சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்வோம்.
இவ்வாறு பாசி கூறினார்.












Click it and Unblock the Notifications