சுனந்தாவை கொன்ற விஷம் எது?: உடற்கூறுகளை லண்டனுக்கு அனுப்பும் போலீஸ்
டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கரின் குடல் உள்ளிட்ட உடற்கூறுகள் தடயவியல் பரிசோதனைக்காக லண்டனுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் டெல்லியில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில் சுனந்தா விஷம் வைத்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு கடந்த மாதம் போலீசாரிடம் அறிக்கை அளித்தது. இதையடுத்து போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. சுனந்தா பொலோனியம் எனப்படும் கதிர்வீச்சு தன்மை கொண்ட விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவரது உடலில் பொலோனியம் 210, தாலியம், பாம்பு விஷம், நீரியம் ஓலியாண்டர் ஆகியவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து சுனந்தாவின் மரணத்திற்கு காரணமான விஷத்தை கண்டறிய அவரது உடற்கூறுகளை இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்க சிறப்பு விசாரணை குழு முடிவு செய்துள்ளது.
சுனந்தா இறப்பதற்கு முன்பு அவர் எந்த நோயாலும் அவதிப்படவில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.