4 ஆண்டு தண்டனைக்கு எதிரான சசிகலாவின் சீராய்வு மனு மீது சுப்ரீம்கோர்ட்டில் இன்று விசாரணை
உச்சநீதிமன்றத்தில் சசிகலாவின் சீராய்வு மனு மீது இன்று விசாரணை நடைபெறுகிறது.
டெல்லி: சொத்து குவிப்பு வழக்கில் உறுதி செய்யப்பட்ட 4 ஆண்டு சிறை தண்டனைக்கு எதிராக சசிகலா தாக்கல் செய்த சீராய்வு மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற உள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு பெங்களூரு விசாரணை நீதிமன்ற நீதிபதி குன்ஹா 4 ஆண்டு சிறை தண்டனை விதித்தார். ஆனால் மேல்முறையீட்டு வழக்கில் அனைவரையும் கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி விடுவித்தார்.
தண்டனை உறுதி
இதை எதிர்த்து கர்நாடகா அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இம்மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், நீதிபதி குன்ஹா தீர்ப்பை உறுதி செய்தது.
பெங்களூரு சிறை
இதனால் பெங்களூரு சிறையில் 4 ஆண்டுகால தண்டனையை சசிகலா, இளவரசி, சுதாகரன் அனுபவித்து வருகின்றனர். இதனிடையே உச்சநீதிமன்றம் தண்டனையை உறுதி செய்ததை எதிர்த்து சசிகலா சீராய்வு மனுவை தாக்கல் செய்தார்.
Recommended Video
நாரிமன்
இந்த சீராய்வு மனு மீது கடந்த 2-ந் தேதி விசாரணை நடைபெறும் என கூறப்பட்டது. அன்று கர்நாடகாவுக்காக காவிரி வழக்கில் ஆஜரானதாலும் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞராக இருந்ததாலும் நீதிபதி நாரிமன் இவ்வழக்கில் இருந்து தம்மை விடுவித்துக் கொண்டார்.
இன்று விசாரணை
இதையடுத்து சீராய்வு மனுவை நீதிபதிகள் அமித்வராய், பாப்டே ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று விசாரிக்க உள்ளது. அதிமுக அணிகள் இணைந்துள்ள நிலையில் சசிகலாவின் சீராய்வு மனு மீதான விசாரணை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.