நீதிபதி குமாரசாமி தீர்ப்பளிக்க மே-12 வரை சுப்ரீம் கோர்ட் அவகாசம்..அதுவரை ஜெ.வுக்கு ஜாமீன் நீட்டிப்பு
டெல்லி: சொத்து குவிப்பு வழக்கில் தமக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து தமிழக முன்னாள் முதல்வர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது தீர்ப்பளிக்க மே 12-ந் தேதி வரை கர்நாடகா உயர்நீதிமன்ற தனி பெஞ்ச் நீதிபதி குமாரசாமிக்கு உச்சநீதிமன்றம் அவகாசம் அளித்துள்ளது. மேலும் இந்த தீர்ப்பு வரும் வரை ஜெயலலிதாவின் ஜாமீனை நீட்டித்தும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ.100 கோடி அபராதமும் விதித்தது. இந்த வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு தலா 4 ஆண்டு சிறை தண்டனையும் தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்த தண்டனையை எதிர்த்தும், தங்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரியும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம் மனுவைத் தள்ளுபடி செய்தது. இதனைத் தொடர்ந்து தங்களுக்கு ஜாமீன் கோரி 4 பேரும் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து அடங்கிய பெஞ்ச் 4 பேருக்கும் டிசம்பர் 18-ந் தேதி வரை முதலில் ஜாமீன் வழங்கியது. இதையடுத்து ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரின் சார்பில் ஜாமீனை நீட்டிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்ற உச்சநீதிமன்றம் ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை மேலும் 4 மாதங்களுக்கு அதாவது ஏப்ரல் 18-ந் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது.

ஜாமீன் நீட்டிப்பு கோரி மனு
இந்த ஜாமீன் காலம் நாளையுடன் முடிவடைகிறது. இந்நிலையில் தங்களின் ஜாமீனை 2-வது முறையாக நீட்டிக்கக்கோரி ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.

மே 12- வரை நீதிபதி குமாரசாமிக்கு அவகாசம்
இந்த மனு மீது இன்று உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து, அருண் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வழங்க ஏப்ரல் 30-ந் தேதி வரை கால அவகாசம் கோரி கர்நாடகா உயர்நீதிமன்ற தனி பெஞ்ச் நீதிபதி குமாரசாமி கடிதம் எழுதியுள்ளது குறித்து விவாதம் நடைபெற்றது. அப்போது வாதிட்ட அந்தி அர்ஜூனா (பவானிசிங் நீக்கக் கோரும் வழக்கில் அன்பழகனுக்காக ஆஜராகும் வழக்கறிஞர்), பவானிசிங் நீக்கம் தொடர்பான வழக்கு 3 நீதிபதிகள் பெஞ்ச்சுக்கு மாற்றப்பட்டிருக்கிறது.. ஆனால் இன்னமும் 3 நீதிபதிகள் நியமிக்கப்படவில்லை. அதுவும் வரும் 21-ந் தேதிதான் விசாரணையே தொடங்க உள்ளது. இந்த சூழலில் நீதிபதி தீர்ப்பளிக்க கூடுதலாக 15 நாட்கள் மட்டும் கால அவகாசம் தருவதாக உச்சநீதிமன்றம் முன்னர் கூறியிருந்தது. இந்த காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதனை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி தத்து தலைமையிலான பெஞ்ச், மேல்முறையீட்டு மனு மீது நீதிபதி குமாரசாமி தீர்ப்பளிக்க மே 12-ந் தேதி வரை கால அவகாசம் அளிப்பதாக உத்தரவிட்டார். அத்துடன் தமக்கு மேலும் கால அவகாசம் தேவை என உரிய காரணங்களுடன் நீதிபதி குமாரசாமி அணுகினால் அதை ஏற்று தீர்ப்பு வழங்குவதற்கான கால அவகாசத்தை நீட்டித்து உத்தரவிடவும் தயார் எனவும் நீதிபதிகள் கூறினர்.

அப்பீல் தீர்ப்பு வரும் வரை ஜெ. ஜாமீன் நீட்டிப்பு
இதனைத் தொடர்ந்து ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் பாலிநாரிமன், ஜெயலலிதாவின் ஜாமீனை ஒட்டுமொத்தமாக வழக்கின் விசாரணை முடியும் வரை நீட்டிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஆனால் இதனை நிராகரித்த தலைமை நீதிபதி தத்து தலைமையிலான பெஞ்ச், மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு வரும் வரை ஜாமீனை நீட்டிப்பதாக உத்தரவு பிறப்பித்தனர்.

சு.சுவாமி கோரிக்கை நிராகரிப்பு
பின்னர் பாரதிய ஜனதாவின் சுப்பிரமணியசாமி, பெங்களூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வகேலா மாற்றம் செய்யப்பட்டது பற்றிய பிரச்சினையை எழுப்பி எதிர்ப்பு தெரிவித்தார். இது நீதித்துறை தொடர்பாக மாற்றம். அதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறி சுவாமியின் கோரிக்கையை தலைமை நீதிபதி தத்து நிராகரித்தார்












Click it and Unblock the Notifications