சாரிடான் மாத்திரை மீதான தடையை தற்காலிகமாக நீக்கியது உச்சநீதிமன்றம்
டெல்லி: சாரிடான் தலைவலி மாத்திரை மீதான மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் தடையை தற்காலிகமாக நீக்கியுள்ளது உச்சநீதிமன்றம்.
மத்திய அரசு சுகாதாரத் துறை கடந்த 7ம் தேதி சாரிடான் உட்பட, 328 வகை மருந்து மாத்திரைகளை விற்பனை செய்வதற்கு தடை விதித்தது.

இதில் தலைவலி மாத்திரையான சாரிடான் மற்றும் சரும கிரீம் பேன்டர்ம் ஆகியவையும் அடங்கும். இதை எதிர்த்து மருந்து உற்பத்தியாளர்கள் மற்றும் மருந்து சங்கங்கள், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
இந்த வழக்கு இன்று, நீதிபதிகள் ஆர்.எப்.நாரிமன் மற்றும் இந்து மல்கோத்ரா ஆகியோர் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, சாரிடான் உட்பட மேலும் 3 மருந்துகள் மீதான தடையை தற்காலிகமாக நீக்க உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வழக்கில் பதிலளிக்குமாறு இன்று உச்சநீதிமன்றத்திற்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
2016ம் ஆண்டு மார்ச் 10ம் தேதி, மத்திய சுகாதாரத்துறை 349 வகை மருந்துகளுக்கு தடை விதித்தது. இதை எதிர்ந்து மருந்து கம்பெனிகள் தொடர்ந்த வழக்கை விசாரித்த டெல்லி ஹைகோர்ட், மத்திய அரசின் தடையை விலக்க உத்தரவிட்டது. ஆனால் இதை எதிர்த்து மத்திய அரசு, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது.
கடந்த டிசம்பரில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், டெல்லி ஹைகோர்ட் உத்தரவை செல்லாது என அறிவித்தது. மேலும் தடை செய்யப்பட்ட மருந்துகளை ஆய்வு செய்யுமாறு, மருந்து ஆய்வு அறிவுரை வாரியத்திற்கு உத்தரவிட்டது. அவ்வமைப்பு சோதனை செய்தபோது, 349 மருந்துகளில் 328 மருந்துகளில் மனிதனுக்கு ஆபத்து விளைவிக்கும் அம்சங்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவற்றின் உற்பத்தி, விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications