வீரப்பன் கூட்டாளிகள் போல் சாந்தன், முருகன், பேரறிவாளனின் தூக்கு ரத்தாகுமா?: நாளை தெரியும்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளனுக்கு கடந்த 1998ம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவர்களின் தூக்கு தண்டனையை கடந்த 2000ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. அவர்கள் அப்போதைய குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலுக்கு அனுப்பிய கருணை மனுக்கள் கடந்த 2011ம் ஆண்டு நிராகரிக்கப்பட்டது.
இதையடுத்து கால தாமதமாக கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டதால் தங்கள் தண்டனையை குறைக்குமாறு அந்த 3 பேரும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது என்று கூறப்பட்டது. இந்நிலையில் இன்று நடந்த வேறு ஒரு வழக்கின் விசாரணை முடிய வெகுநேரம் ஆனதால் இந்த 3 பேரின் மனுக்கள் மீதான விசாரணை நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக காலதாமதமாக கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டதால் சந்தன கடத்தல் வீரப்பனின் கூட்டாளிகள் 15 பேரின் மரண தண்டனையை அண்மையில் உச்ச நீதிமன்றம் ஆயுள் தண்டனையாக குறைத்தது. அதே போன்று முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளனின் தூக்கு தண்டனையும் ஆயுள் தண்டனையாக குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ராஜீவ் கொலை வழக்கில் 26 பேருக்கு கடந்த 1998ம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு சென்றபோது நளினி, முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளனுக்கு மட்டும் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது.
இதில் நளினியின் தூக்கு தண்டனை மாநில அமைச்சரவை மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் வேண்டுகோளுக்கு இணங்க கடந்த 2000ம் ஆண்டு ஆயுள் தண்டனையாக குறைத்து தமிழக ஆளுநர் உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications