திமுக தைரியமாக திருச்சி கூட்டத்தை நடத்த இதுதான் காரணம்!
நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்த ஒட்டுமொத்தமாக உச்சநீதிமன்றம் தடை விதிக்கவில்லை.
டெல்லி: நீட் தேர்வுக்கு எதிராக அமைதியான முறையில் போராட்டம் நடத்தலாம் என்றுதான் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது. அதனால்தான் திமுக தைரியமாக தனது திருச்சிக் கூட்டத்தை நடத்தியுள்ளது.
அனிதாவின் மரணத்தையடுத்து தமிழகம் முழுவதும் 7ஆவது நாளாக போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில் நீட்டுக்கு எதிராக போராடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் ஜிஎஸ் மணி என்ற வழக்கறிஞர் வழக்குதொடுத்தார்.
இந்த நிலையில் இந்த வழக்கில் தமிழகத்தில் நீட் போராட்டம் நடத்த தடை விதிக்கப்படுவதாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து பாஜக தலைவர் தமிழிசையும், திருச்சியில் திமுக கூட்டத்தை நடத்தக் கூடாது என்று டிவீட் போட்டார். பதறிப் போன திருச்சி காவல்துறையும் திமுக கூட்டத்திற்கு அனுமதி மறுத்தது.

டென்ஷன் ஆகாத திமுக
ஆனால் திமுக இதைப் பொருட்படுத்தவில்லை. சட்ட நிபுணர்களிடம் அவசர ஆலோசனை நடத்திய பின்னர் அதிரடியாக கூட்டத்தை நடத்தியது. இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். திருச்சியில் பரபரப்பு கூடியது.

தீர்ப்பு இதுதான்
இந்த நிலையில் உச்சநீதிமன்றத் தீர்ப்பின் விவரங்கள் தெரிய வந்துள்ளது. வாத, பிரதி வாதங்கள் முடிந்து உச்சநீதிமன்றம் எழுத்துப்பூர்வமாக அளித்த இடைக்கால தீர்ப்பில், நீட்டுக்கு எதிராக போராட்டத்தை அமைதியாக நடத்தலாம். அது மக்களின் உரிமை சார்ந்தது. மேலும் மக்களுக்கு எந்தவிதமான இடையூறும் இல்லாத வகையில் சட்டத்திற்கு உட்பட்டு போராட்டம் நடத்தலாம். சட்ட ஒழுங்கை பாதிக்காத வகையில் போராட்டம் நடத்தலாம்.

தாராளமாக நடத்தலாம்
ஆர்ப்பாட்டம், போராட்டம், உண்ணாவிரதம் உள்ளிட்டவற்றை தாராளமாக நடத்தலாம். மாற்றுக் கருத்துக்களை எடுத்து வைக்கலாம். எதிர்ப்பைத் தெரிவிக்கலாம். இதற்கு சட்டப்படி உரிமை உண்டு. அதேசமயம், சட்டம் ஒழுங்கு சீர்குலைய அனுமதி கிடையாது. அதை அனுமதிக்க முடியாது.

சட்டம் ஒழுங்கு சீர்குலையக் கூடாது
போராட்டம் என்பது வேறு, சட்டம் ஒழுங்கு என்பது வேறு. சட்டம் ஒழுங்கு சீர்குலையும் வகையில் யாரேனும் நடந்து கொண்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கலாம் என உச்சநீதி்மன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணை மீண்டும் 18ஆம் தேதி வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications