சர்ச்சைக்குரிய 'உத்தா பஞ்சாப்' படத்தை நாளை வெளியிட உச்சநீதிமன்றம் அனுமதி!
மும்பை: சர்ச்சைக்குரிய உத்தா பஞ்சாப் திரைப்படத்தை நாளை வெளியிடுவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியிருக்கிறது.
ஷாகித் கபூர், அலியா பட், கரீனா கபூர் நடிப்பில் போதைப்பொருளைக் கருவாக கொண்டு உருவாகியிருக்கும் உத்தா பஞ்சாப் திரைப்படம், தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறது.
கடந்த வாரம் தணிக்கைக்கு சென்ற இப்படத்தின் காட்சிகளை 89 இடங்களில் வெட்டுமாறு மத்திய தணிக்கைக் குழு பரிந்துரை செய்தது. இதனை எதிர்த்து படக்குழுவினர் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம் ஒரு காட்சியை மட்டும் நீக்குமாறு கூறி, இப்படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்குமாறு தணிக்கைக் குழுவுக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில் உத்தா பஞ்சாப் படத்திற்கு இடைக்காலத் தடை விதிக்கும்படி, பஞ்சாப் மாநிலத்தின் தொண்டு நிறுவனம் ஒன்று உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது.
மேலும் தன்னுடைய மனுவில் மும்பை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கும் அந்த நிறுவனம் எதிர்ப்புத் தெரிவித்திருந்தது. இந்த வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம் தொண்டு நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்து, உத்தா பஞ்சாப் படத்தை வெளியிடுவதற்கு அனுமதி வழங்கி தீர்ப்பளித்திருக்கிறது.
இதனால் திட்டமிட்டபடி நாளை இப்படம் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.