எதிர்பார்ப்பில் விவசாயிகள்.. காவிரி வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்த சுப்ரீம்கோர்ட்!
Recommended Video

டெல்லி: காவிரி வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது உச்சநீதிமன்றம்.
காவிரி நதி நீர்ப் பங்கீடு தொடர்பாக 2007ல் காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பு குறித்து தமிழகம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளன.
இந்த மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் இறுதி விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் 27வது நாளாக இன்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் அமிதவா ராய், ஏ.எம். கான்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணை நடைபெற்றது.

மூத்த வழக்கறிஞர்கள் ஆஜர்
இதுவரை, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்கள் தரப்பு வாதிட்ட பிறகு, தமிழகம் தனது வாதத்தை முன்வைத்தது. தமிழகம் சார்பில் சேகர் நாப்டேவும், கர்நாடகா சார்பில் நாரிமனும் ஆஜராகினர். மத்திய அரசு இறுதியாக தனது வாதத்தை முன் வைத்தது. மத்திய அரசின் சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார் ஆஜரானார்.

எதிர்பார்ப்பு
அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், எழுத்து தரப்பிலான வாதங்களை அனைத்து தரப்பும் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதில் வெளியாகும் தீர்ப்பு தமிழகத்திற்கு மிகவும் முக்கியமானது என்பதால் விவசாயிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசு மீது குற்றச்சாட்டு
மத்திய அரசை நம்ப முடியாது என்பதால் உச்சநீதிமன்றமே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தமிழக அரசு முன்வைத்த முக்கிய கோரிக்கை.

தீர்ப்பு ஒத்தி வைப்பு
இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, காவிரி வழக்கில் மாநில அரசுகள் சார்பில் தொழில்நுட்ப வல்லுநர்கள் கருத்தை தெரிவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. காவிரி வழக்கில் தொழில்நுட்பரீதியான வாதங்களை காவிரி தொழில்நுட்பக் குழுத் தலைவர் சுப்ரமணியன் தெரிவிப்பார் என தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்த நிலையில், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications