கேரள அரசின் மதுக்கொள்கைக்கு எதிரான வழக்கு... தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்
புதுடெல்லி : கேரள அரசின் மதுக் கொள்கைக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது.
கேரள அரசு, அந்த மாநிலத்தில் 2023-ம் ஆண்டுக்குள் பூரண மதுவிலக்கை அமல்படுத்த முடிவு செய்துள்ளது. முதல் கட்ட நடவடிக்கையாக 3 மற்றும் 5 நட்சத்திர ஓட்டல்களில் உள்ள மதுபான பார்களுக்கு மட்டுமே உரிமம் புதுப்பிக்கப்படும் என அறிவித்தது.

இதனால் பாதிப்புக்கு ஆளான பிற மதுபான பார் அதிபர்கள் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் கேரள அரசின் மதுக்கொள்கை உறுதி செய்து அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதை எதிர்த்து பார் உரிமையாளர்கள் தரப்பினரும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை நீதிபதி விக்ரம்ஜித் சென் தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தியது.
இந்த விசாரணையின்போது, மனுதாரர்கள் தரப்பில், கேரள அரசின் முடிவு ஒருதலைப்பட்சமானது என வாதிடப்பட்டது. ஆனால் கேரள அரசோ, தங்களது முடிவு கொள்கை முடிவு என கூறியது. இந்த வழக்கில் விசாரணை முடிவுக்கு வந்ததையடுத்து, நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.
தமிழகத்திலும் மது விலக்கு முழக்கம் அதிகரித்து வரும் வேளையில் கேரள அரசின் மதுக் கொள்கை குறித்து வெளியிடப்பட உள்ள உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு முன் மாதிரியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications