கேரள மீனவர்களை சுட்டு கொன்ற இத்தாலி கடற்படையினர் மீதான வழக்கு தற்காலிக நிறுத்தம்!
டெல்லி: கேரள மீனவர்களை இத்தாலி கடற்படை வீரர்கள் சுட்டுக்கொலை செய்த வழக்கை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது உச்சநீதிமன்றம்.
2012-ம் ஆண்டு கொச்சி கடல்பகுதியில் இரு மீனவர்களை, கப்பலில் வந்த இத்தாலி கடற்படை வீரர்கள் சுட்டுக்கொன்ற வழக்கு, ஐ.நா.வின் தீர்ப்பாயத்தில் நடந்து வருகிறது.

இந்த வழக்கில், இந்திய மீனவர்களை சுட்டுக் கொன்ற இத்தாலிய கடற்படை வீரர்கள் இருவருக்கு எதிரான நீதிமன்ற நடவடிக்கைகளை இந்தியாவும், இத்தாலியும் நிறுத்திக் கொள்ள வேண்டுமென ஐநா சர்வதேச கடல் சட்ட தீர்ப்பாயம் சமீபத்தில் உத்தரவிட்டது.
இந்த வழக்கு தங்கள் விசாரணை வரம்புக்குள் வருவதாக கூறியுள்ள தீர்ப்பாயம், இது தொடர்பாக இத்தாலி, இந்திய அரசுகள் செப்டம்பர் 24ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டுமெனவும் கூறியது.
இதையடுத்து இரு இத்தாலி வீரர்கள் மீது மத்திய அரசு தொடர்ந்த வழக்குகளின் விசாரணை 2016ம் ஆண்டு ஜனவரி 13ம் தேதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
2012 பிப்ரவரி 15ல் கேரள கடல் பகுதியில் படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் இருவரை இத்தாலிய சரக்கு கப்பலில் பாதுகாப்பு பணியில் இருந்த அந்நாட்டு கடற்படை வீரர்கள் இருவர் சுட்டுக் கொன்றனர்.
இதையடுத்து அந்த கடற்படை வீரர்கள் லட்டோரி, சல்வேடார் கிரோன் ஆகியோர் மீது இந்தியாவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அப்போது உடனடியாக கைது செய்யப்பட்ட அவர்கள் பின்னர் ஜாமீன் பெற்றனர். இதில் சல்வேடார் டெல்லியில் உள்ள இத்தாலி தூதரகத்தில் தங்கியுள்ளார். லட்டோரி சிகிச்சைக்காக இத்தாலி சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications