சொகுசு கார் இறக்குமதி வழக்கில் 2 ஆண்டு சிறை- நடராஜன் சரணடைந்து ஜாமீன் பெற உச்சநீதிமன்றம் உத்தரவு
சொகுசு கார் இறக்குமதி மோசடி வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா கணவர் நடராஜன், பாஸ்கரன் இருவரும் நீதிமன்றத்தில் சரணடைந்து ஜாமீன் பெற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி: சொகுசு கார் இறக்குமதி வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை உறுதி செய்யப்பட்ட சசிகலாவின் கணவர் நடராஜன், டிடிவி தினகரனின் தம்பி பாஸ்கரன் இருவரும் நீதிமன்றத்தில் சரணடைந்து ஜாமீன் பெற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1994-ம் ஆண்டு வெளிநாட்டில் இருந்து லெக்சஸ் காரை நடராஜன் இறக்குமதி செய்ததில் அரசுக்கு ரூ1.64 கோடி இழப்பு ஏற்படுத்தினார் என்பது வழக்கு. இவ்வழக்கில் நடராஜன், தினகரன் தம்பி பாஸ்கரன் உள்ளிட்டோருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை 2010-ம் ஆண்டு விதிக்கப்பட்டது.
இத்தண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் நடராஜன் உள்ளிட்டோருக்கு விதித்த தண்டனையை உறுதி செய்தது. அத்துடன் உடனே நீதிமன்றத்தில் சரணடையவும் உத்தரவிட்டது.
ஆனால் நடராஜன் உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் சரணடையாமல் மருத்துவமனையில் பதுங்கிக் கொண்டு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இம்மனுவை விசாரித்தா உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் குப்தா, நடராஜன் மற்றும் பாஸ்கரன் சரணடைவதில் இருந்து விலக்கு அளித்து உத்தரவிட்டார்.
இதனிடையே உச்சநீதிமன்றத்தின் உத்தரவு தங்களுக்கு கிடைக்கவில்லை என கூறி நடராஜன், பாஸ்கரனுக்கு கடந்த 7-ந் தேதி பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னை சி.பி.ஐ நீதிமன்றம் உத்தரவிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து தங்களுக்கு ஜாமீன் கோரி நடராஜன் உள்ளிட்டோர் மீண்டும் உச்சநீதிமன்றத்தை நாடினர்.
இதை விசாரித்த உச்சநீதிமன்றம்,. ரூ25,00,000-க்கு பிணைத்தொகை செலுத்தி நடராஜன் உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் சரணடைந்து ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம் என இன்று உத்தரவிட்டது.