உடனே என்றால் உடனடியாகன்னு அர்த்தம்- சசி வக்கீலுக்கு சுப்ரீம் கோர்ட் சுளீர்!
பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைய அவகாசம் கேட்ட சசிகலாவின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.
டெல்லி: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் 4 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா உடனடியாக பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைந்தே ஆக வேண்டும் என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக கூறிவிட்டது.
ஜெயலலிதா மீதான வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் கர்நாடகா அரசின் மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. அதில் ஜெயலலிதா குற்றவாளி; அவர் மரணடைந்ததால் தண்டனை இல்லை; அதேநேரத்தில் சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் விதித்த 4 ஆண்டு சிறை தண்டனை உறுதி செய்யப்படுகிறது என தீர்ப்பளிக்கப்பட்டது.
மேலும் சசிகலா உள்ளிட்டோர் உடனே நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் சசிகலா நேற்று பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடையவில்லை.
இதனிடையே உச்சநீதிமன்றத்தில் சசிகலா தரப்பில் சரணடைவதற்கான கால அவகாசம் கோரப்பட்டது. இதை நிராகரித்த நீதிபதி பினாக்கி சந்திரகோஷ், தீர்ப்பில் மிகத் தெளிவாக கூறியிருக்கிறோம். அதில் எந்த மாற்றமும் இல்லை. நேற்றைய தீர்ப்பில் உடனடியாக சரணடைய வேண்டும் என கூறியுள்ளோம். உடனடியாக என்றால் உடனடியாக சரணடைய வேண்டும் என்றுதான் அர்த்தம் என காட்டமாக கூறினார்.
இதனால் வேறுவழியே இல்லாமல் சசிகலா இன்று பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைவதற்காக புறப்பட்டுச் சென்றார்.