நாட்டின் முதலாவது பெண் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்!
டெல்லி: நாட்டின் முதலாவது பெண் வெளியுறவுத் துறை அமைச்சராக சுஷ்மா ஸ்வராஜ் பதவியேற்றுள்ளார்.
நரேந்திர மோடி அமைச்சரவையில் முக்கிய அமைச்சர்களில் ஒருவராக சுஷ்மா ஸ்வராஜூம் இடம்பெற்றுள்ளார். வெளியுறவுத் துறை கிடைத்திருப்பதன் மூலம் நாட்டின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவில் சுஷ்மாவும் இடம்பெறுவார். அத்துடன் வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரங்கள் துறையும் சுஷ்மாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது,
பாகிஸ்தான், சீனாவுடனான உறவுகள் சவால் நிறைந்ததாக இருக்கும் நிலையில் சுஷ்மா இந்த விவகாரங்களை எப்படி கையாளப் போகிறார் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில்..
1970களில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் மாணவர் பிரிவில் தம்மை இணைத்துக் கொண்டு அரசியல் வாழ்க்கை தொடங்கியவர் சுஷ்மா.
ஹரியானா எம்.எல்.ஏ.
1977ஆம் ஆண்டு முதல் 1982ஆம் ஆண்டு வரை ஹரியானா எம்.எல்.ஏ.வாக இருந்தார்.
25 வயதில் அமைச்சர்
1977ஆம் ஆண்டு தமது 25 வயதில் ஹரியானா மாநிலத்தின் கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்று நாட்டை திரும்பி பார்க்க வைத்தவர் சுஷ்மா ஸ்வராஜ்.
7 முறை எம்.பி
உச்சநீதிமன்ற வழக்கறிஞரான சுஷ்மா ஸ்வராஜ் 7 முறை லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு வென்றுள்ளார். மூன்று முறை சட்டசபை தேர்தல்களில் போட்டியிட்டு வென்றுள்ளார்.
வாஜ்பாய் அரசில் அமைச்சர்
1996ஆம் ஆண்டு வாஜ்பாயின் 13 நாள் அமைச்சரவையில் தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சராக பணிபுரிந்தார். அதற்கு அடுத்த வாஜ்பாய் அரசிலும் அமைச்சராக இருந்தார்.
டெல்லியின் முதலாவது பெண் முதல்வர்
1998ஆம் ஆண்டு அக்டோபரில் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து டெல்லியில் முதலாவது பெண் முதல்வராக பதவியேற்றார் சுஷ்மா.
ஈழத் தமிழர், மீனவர் விவகாரங்கள்..
இப்போது நாட்டின் முதலாவது பெண் வெளியுறவுத் துறை அமைச்சராகியிருக்கிறார். இலங்கையுடனான மிக நெருக்கமான நட்புறவு கொண்டவர் சுஷ்மா என்ற விமர்சனத்துக்கு அப்பால் ஈழத் தமிழர் பிரச்சனை, தமிழக மீனவர் பிரச்சனை ஆகியவற்றில் சுஷ்மா எப்படி நடந்து கொள்ளப் போகிறார் என்பதையும் தமிழகம் உன்னிப்பாக கவனித்தும் வருகிறது.