பாகிஸ்தானில் தவிக்கும் இந்திய பெண் கீதா விரைவில் நாடு திரும்புவார்: சுஷ்மா சுவராஜ் நம்பிக்கை
டெல்லி: பாகிஸ்தானுக்கு வழி தவறிச் சென்ற இந்திய மாற்றுத்திறனாளி பெண் கீதா விரைவில் நாடு திரும்ப அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும் என வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
பேச்சுத்திறன் மற்றும் கேட்கும் திறன் குறைபாடுடைய இந்தியப் பெண் கீதா 8 வயது இருக்கும் போது, கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் தவறுதலாக எல்லைக் கோட்டை தாண்டி பாகிஸ்தானுக்குள் திசை மாறிச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. அங்கு தவித்த அவரை அங்குள்ள எத்தி அறக்கட்டளையினர் மீட்டு வளர்த்து வந்தனர்.

இந்நிலையில், அந்தப்பெண் இந்தியாவைச் சேர்ந்தவர் தான் என்று இந்திய வெளியுறவுத்துறை ஆகஸ்ட் மாதம் உறுதி செய்தது. இதையடுத்து இந்தியாவில் இருக்கும் அவரது பெற்றோரை அடையாளம் காண்பதற்கு இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.
அதன்படி கீதாவின் குடும்பத்தினராக இருக்கலாம் என்ற கோணத்தில் 3 புகைப்படங்களை அவருக்கு அனுப்பியது வெளியுறவுத்துறை. அதில் அவர் ஒன்றைத் தேர்ந்தெடுத்துள்ளார். மேலும், அவரின் தாய், தந்தை மற்றும் நான்கு சகோதரர்கள் பீகாரில் வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து சுஷ்மா சுவராஜ் கூறுகையில், கீதாவை இந்தியா கொண்டு வர அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. விரைவில் அவர் நாடு திரும்புவார். மரபணு சோதனை நடத்தி உறுதி செய்யப்பட்ட பின்னர் அவரின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படுவார் என்றார்.
இதுகுறித்து வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் கூறுகையில், கீதாவின் பெற்றோர்கள் கண்டறியப்படாவிட்டாலும், அவர் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டிருப்பார். ஏனெனில் கீதா இந்தியாவின் மகள் ஆவார் என்றார்.












Click it and Unblock the Notifications