உள்துறை அமைச்சகம் முன் தர்ணா: டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் மிரட்டல்
டெல்லி: அலட்சியப் போக்குடன் நடந்துகொண்ட போலீஸார் மீது வரும் திங்கட்கிழமை காலை 10 மணிக்குள் மத்திய உள்துறை நடவடிக்கை எடுக்காவிட்டால் தர்னாவில் ஈடுபடுவேன் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மிரட்டல் விடுத்துள்ளார்.
டெல்லியில் வெளிநாட்டு பெண் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் அலட்சியமாக இருந்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது டெல்லி அரசின் கோரிக்கை. ஆனால் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளதால் டெல்லி போலீஸ் கமிஷன் இதனை நிராகரித்து வருகிறார்.

இந்நிலையில் டெல்லி முதல்வர் கேஜரிவால், அமைச்சர்கள் ராக்கி பிர்லா, சோம்நாத் பார்தி, மணீஷ் சிசோடியா ஆகியோர் மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டேவை நேற்று மாலை சந்தித்தனர். அதன் பிறகு செய்தியாளர்களிடம் முதல்வர் கேஜரிவால் பேசுகையில், தேசிய தலைநகரில் குற்றங்களின் சதவீதம் மிகவும் அதிகரித்துள்ளது. நகரில் குற்றங்கள் எங்கு நிகழ்ந்தாலும் மக்கள் அதற்கு தீர்வு கேட்டு எங்களிடம்தான் வருகின்றனர். அவர்கள் இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சரைக் கேட்பதில்லை. ஆகவே, டெல்லி பிரதேச அரசிடம் காவல் துறையை ஒப்படைக்க வேண்டிய முக்கியமான தருணம் இது. தேவைப்பட்டால், புது டெல்லி முனிசிபல் கவுன்சிலுக்கு உள்பட்ட பகுதியையும், லுட்யன்ஸ் மண்டலப் பாதுகாப்பு பொறுப்பையும் மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளலாம்.
பிற பகுதிகளின் சட்டம் - ஒழுங்கு பராமரிக்கும் கட்டுப்பாட்டை டெல்லி அரசிடம் வழங்க வேண்டும். இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளோம்.
கடமையைச் செய்வதில் அலட்சியம் காட்டிய போலீஸ் அதிகாரிகள் நால்வரை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினோம். எங்களது கோரிக்கைகளை பரிசீலிப்பதாக அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டே உறுதியளித்துள்ளார் என்றார் அவர்.
கேஜரிவால் சந்தித்துவிட்டுச் சென்ற பிறகு டெல்லி காவல் துறை ஆணையர் பி.எஸ். பஸ்ஸியும் மத்திய உள்துறை அமைச்சரைச் சந்தித்துப் பேசினார். இந்த விவகாரத்தில் விசாரணை நடைபெற்றுவருவதாக அவரிடம் கூறினார் எனத் தெரிகிறது.
இதனிடையே, டெல்லி அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், டெல்லியில் நடைபெற்றுவரும் தொடர் குற்றச் சம்பவங்கள் தொடர்பான விஷயங்கள் அடங்கிய கடிதத்தை உள்துறை அமைச்சரிடம் முதல்வர் கேஜரிவால் வழங்கியுள்ளார்.
மேலும், தங்களது கடமையைச் செய்யாமல் அலட்சியப் போக்குடன் நடந்து கொண்ட சாகர்பூர், மால்வியா நகர் இன்ஸ்பெக்டர்கள், உதவி காவல் ஆணையர்கள் ஹர்பால் சிங், ஜாக்கர் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். அவர்கள் மீது வரும் நாளை மறுநாள் காலை 10 மணிக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் அன்றைய தினம் காலை 11 மணிக்கு அமைச்சரவை சகாக்களுடனும் எம்எல்ஏக்களுடனும் சேர்ந்து உள்துறை அமைச்சகம் அமைந்துள்ள வடக்கு பிளாக் முன்புறம் அமர்ந்து தர்னாவில் முதல்வர் ஈடுபடுவார்.
இந்த நிகழ்வில் பொதுமக்களும் கலந்துகொள்ளலாம் என்று முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications