ஸ்பைஸ்ஜெட் கை மாறிய விவகாரம்... பிரதமர் மோடிக்கு சு.சுவாமி மீண்டும் கடிதம்
டெல்லி: சன் குழுமத்திடம் இருந்து கை மாறிய ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் உரிமையாளர் குறித்து விசாரணை நடத்த ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு பாரதிய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமி மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளார்.
ஸ்பைஸ்ஜெட் விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கடந்த 20ம் தேதி சுப்பிரமணியன் சுவாமி கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.

அதில், ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் 58.46% பங்குகள் கலாநிதி மாறனிடமிருந்து அஜய் சிங்குக்கு விற்கப்பட்டுள்ள நிலையில் இதற்கான விலை மிகவும் குறைத்து மதிப்பிடப்பட்டிருக்கிறது என அதில் சுவாமி குறிப்பிட்டிருந்தார். இந்த முரண்பாடான விலை, கம்பெனிகள் சட்ட விதிமுறைகளுக்கு எதிரானது என்றும் சுவாமி தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இது போன்ற நடவடிக்கைகளை கண்காணிக்க பங்குச் சந்தை வழிகாட்டு ஆணையமான செபி உருவாக்கியிருந்த விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை எனவும் சுவாமி தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
தற்போது மீண்டும் பிரதமர் மோடிக்கு சுப்பிரமணியன் சுவாமி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் அமலாக்கப் பிரிவு, புலனாய்வுப் பிரிவு மற்றும் ரா அதிகாரிகளின் உதவியுடன் ஸ்பைஸ்ஜெட் விதிமீறல்கள் குறித்து பிரதமர் அலுவலகம் விசாரணை நடத்த வேண்டும்.
மேலும் ஸ்பைஸ்ஜெட் நிறுவன உரிமையாளர் இயங்கிக் கொண்டிருந்த விமான நிறுவனத்தில் ரூ1300 கோடியை முதலீடு செய்திருப்பது குறித்து விமானப் போக்குவரத்து அமைச்சகம் மவுனமாக இருப்பது ஏன்? என்றும் சுவாமி கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications