மீனவர் படகுகள் விவகாரம்.. அந்தர்பல்டி அடித்தார் சுப்பிரமணியன் சுவாமி!
டெல்லி: தமிழக மீனவர் படகுகளை விடுவிக்க வேண்டாம் என்று இலங்கைக்கு நானே ஆலோசனை கூறியதாக பேட்டியளித்திருந்த பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி தற்போது தாம் அப்படிக் கூறவில்லை என்று மறுத்துள்ளார்.
பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், இலங்கைக்கு தான் சென்று மகிந்த ராஜபக்சேவை சந்தித்த போது தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்தால் அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துங்கள்.. அவர்கள் தொழிலாளர்கள். அதனால் விடுவித்துவிடுங்கள். ஆனால் அவர்களது படகுகளின் உரிமையாளர்கள் பணக்காரர்கள். அதை விடுவிக்க வேண்டாம் என்று சொன்னேன். அதைத்தான் இலங்கை அரசு செய்து கொண்டிருக்கிறது என்று கூறியிருந்தார்.
இந்த பேட்டிக்கு தமிழகத்தில் கடுமையாக எதிர்ப்பு கிளம்பியது. சுப்பிரமணியன் சுவாமியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் அனுப்பியிருந்தார்.

மேலும் தமிழகம் முழுவதும் கடந்த 3 நாட்களாக சுப்பிரமணியன் சுவாமியின் கொடும்பாவி எரிப்புப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
அந்தர்பல்டி அடித்த சு.சுவாமி
இந்த நிலையில் தான் மீனவர் படகுகளை விடுவிக்க வேண்டாம் என்று இலங்கை அதிபர் ராஜபக்சேவிடம் கூறவே இல்லை என்று பல்டி அடித்திருக்கிறார்.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள சுப்பிரமணியன் சுவாமி, ஜெயலலிதா திரைத்துறையைச் சேர்ந்தவர். அவர் எழுதி வைக்கப்பட்ட ஸ்கிரிப்டைத்தான் படிப்பார். நான் அப்படி எல்லாம் சொல்லவில்லை.
நான் மீனவர்கள் நலனுக்காகத்தான் செயல்படுகிறேன். அதனால் பலருக்கு என்னைப் பிடிக்கவில்லை.
ராமேஸ்வரம் மீனவர்கள் என்னை சந்தித்து இலங்கை சிறையில் உள்ளவர்களை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவைக் கொண்டு நான் ராஜபக்சேவிடம் கொடுத்தேன். அதனை ஏற்று மீனவர்களை ராஜபக்சே விடுவித்தார்.
ஆனால் மீன்பிடி இயந்திரப் படகுகளின் உரிமையாளர்கள் படகுகளை மீட்குமாறு என்னிடம் கோரிக்கை விடுவிக்கவில்லை. மீனவர்கள் பிடிக்கும் இயந்திரப் படகுகளின் உரிமையாளர்கள் டி.ஆர்.பாலு, சசிகலா போன்றவர்கள்தான்.. என்றார்
அப்போது குறுக்கிட்ட செய்தியாளர்கள் நீங்கள்தான் மீன்பிடி படகுகளை விடுவிக்குமாறு ராஜபக்சேவிடம் கூறியதாக சொல்லி இருக்கிறீர்களே என்ற கேள்விக்கு, இல்லை.. இல்லை.. ராஜபக்சேதான் மீன்பிடி படகுகளை விடுவிக்க முடியாது என்றார் என்று கூறியுள்ளார் சுப்பிரமணியன் சுவாமி.












Click it and Unblock the Notifications