ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியில் இருந்து ரகுராம் ராஜனை உடனே டிஸ்மிஸ் செய்ய மோடிக்கு சு.சுவாமி கடிதம்
டெல்லி: இந்தியராக தம்மை கருதாத, இந்திய பொருளாதார நலன்களுக்கு எதிராக செயல்படும் ரிசர்வ் வங்கி ஆளுநரான ரகுராம் ராஜனை அப்பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு பாஜக ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி கடிதம் அனுப்பியுள்ளார்.
மத்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனுக்கு எதிராக தொடர்ந்து போர்க்கொடி தூக்கி வருகிறார் சுப்பிரமணியன் சுவாமி. அண்மையில் இந்தியாவில் லஞ்சம், ஊழல் தான் எல்லா வளர்ச்சியையும் பாதிக்கிறது. லஞ்சம் தருவதை மக்களே வெறுக்க ஆரம்பித்து விட்டனர் என்று லண்டனில் நடைபெற்ற கருத்தரங்கம் ஒன்றில் ரகுராம் ராஜன் பேசியிருந்தார்.

டிஸ்மிஸ் செய்ய கோரிக்கை
இதற்கு சுப்பிரமணியன் சுவாமி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். ரகுராம் ராஜனை ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியில் இருந்தே நீக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தார்.

சிகாகோவுக்கு அனுப்புக
அத்துடன், ரிசர்வ் வங்கியின் ஆளுநர் பதவிக்கு ரகுராம் ராஜன் பொருத்தமானவர் அல்ல என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்தாகும். பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதாகக் கூறி, வட்டிவிகிதத்தை உயர்த்திவிட்டார். இதனால், தொழில்கள் பாதிக்கப்பட்டு நாட்டில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துவிட்டது. ரகுராம் ராஜனை சிகாகோ நகருக்கே விரைவில் திருப்பி அனுப்புவது நல்லது என்று கருதுகிறேன் எனக் கூறியிருந்தார். சிகாகோ பல்கலைக்கழகத்தில் ரகுராம் ராஜன் பேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மோடிக்கு கடிதம்
இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு சுப்பிரமணியன் சுவாமி கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். அதில், ரகுராம் ராஜன் தம்மை முழுமையான ஒரு இந்தியராக கருதவே இல்லை. இந்திய பொருளாதாரத்தை திட்டமிட்டு அவர் சீர்குலைத்து வருகிறார். இந்தியாவின் ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்து கொண்டே அமெரிக்காவின் கிரீன் கார்டை அவர் புதுப்பித்திருக்கிறார்.

நிறையபேர் வெயிட்டிங்...
முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் நியமிக்கப்பட்ட ஒருவர் இந்திய பொருளாதார நலன்களுக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருப்பதை என்னால் வேடிக்கை பார்க்க முடியாது. ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவிக்கு ரகுராம்ராஜனை விட பொருத்தமான நாட்டின் வளர்ச்சியில் பொருளாதார நலனில் அக்கறை கொண்ட பலரும் இருக்கிறார். ஆகையால் ரகுராம்ராஜனை அப்பதவியில் இருந்து உடனே நீக்க வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறார் சுப்பிரமணியன் சுவாமி.












Click it and Unblock the Notifications