நாற்றம் தாங்க முடியாமல் முகர்ந்து பார்க்க வைத்திருந்த லெமன் அது.. புஸ்ஸாகிப் போன பவானி சிங் பரபரப்பு
டெல்லி:சொத்துக்குவிப்பு வழக்கில் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் ஆஜராகும் அரசு வழக்கறிஞர் பவானி சிங்கின் இருக்கையில் கறுப்பு மற்றும் வெள்ளை மை தடவிய எலுமிச்சை பழம் வைக்கப்பட்டு இருந்ததாக வெளியான பரபரப்பு அதே வேகத்தில் புஸ்ஸாகி விட்டது.
அதாவது அது மந்திரித்த. செய்வினை செய்யப்பட்ட எலுமிச்சம் பழம் இல்லையாம். மாறாக யாரோ ஒரு வக்கீல் மறந்து வைத்து விட்டுப் போன எலுமிச்சையாம்.
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை பெங்களூரு உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அரசு சிறப்பு வழக்கறிஞர் பவானி சிங் வாதிட்டு வருகிறார்.
விசாரணை அதிகாரிகளின் வாக்குமூலத்தைப் படிக்கும்போது நீதிபதி கேட்கும் எந்த ஒரு கேள்விக்கும் பவானி சிங் பதில் சொல்லாததால் ஊடகங்கள் பவானி சிங்கை வறுத்தெடுத்து வருகின்றன. அரசு வழக்கறிஞருக்கு நீதிபதி கண்டனம் என்று வெளியிடுகின்றன. இதனையடுத்து நீதிபதி குமாரசாமி பத்திரிகைகளுக்கு அறிவுரை வழங்கி வருகிறார்.
சில நாட்கள் விடுமுறைக்குப் பின்னர் கடந்த 4ஆம் தேதியில் இருந்து வழக்கு விசாரணை மீண்டும் சூடுபிடித்துள்ளது. ஒவ்வொரு வாக்குமூலத்தை வாசிக்கும் போதும் நீதிபதி மீண்டும் கேள்விகள் கேட்டு அரசு வழக்கறிஞரின் பதிலையும் பதிவு செய்து வருகிறார்.

எலுமிச்சை பரபரப்பு
இந்த நிலையில் ஒரு எலுமிச்சம் பழம் பெரிய பரபரப்பைக் கிளப்பி விட்டு விட்டது. புதன்கிழமையன்று பவானி சிங்கின் இருக்கையில் கறுப்பு மற்றும் வெள்ளை மை தடவிய எலுமிச்சை பழம் வைக்கப்பட்டு இருந்ததாக கூறப்பட்டது. அதை மதுரையிலிருந்து கொண்டு வந்ததாகவும் செய்திகள் வெளியாகின.

என்ன எலுமிச்சை அது
இது தொடர்பாக செய்தியாளர்கள் அவரிடம் கேட்டதற்கு, அதை யார் கொண்டு வந்து வைத்தார்கள் என தெரியவில்லை என்று அவர் கூறியதாகவும் செய்திகள் வெளியாகின.

நேரா உருட்டுங்க
இதே போல முன்பு ஜெயலலிதாவின் வழக்கறிஞர்கள் சிலர் நீதிபதிக்கு நேராக அமர்ந்து கொண்டு தங்களது பாக்கெட்டில் மந்திரித்த எலுமிச்சை பழத்தை உருட்டுவதாக செய்தி வெளியானது

பவானிசிங் சிரிப்பு
இந்த நிலையில் பவானி சிங்கின் இருக்கையில் எலுமிச்சை என்பது புதிய பரபரப்பைக் கிளப்பியது. ஆனால் அப்படி எதுவும் இல்லை என்று பவானி சிங்கே மறுத்து விட்டார்.

நான் பார்க்கவேயில்லை
உண்மையில் ஒரு வக்கீல் தவறுதலாக மறந்து விட்டுச் சென்ற எலுமிச்சையாம் அது. இதுகுறித்து பவானி சிங் கூறுகையில், உண்மையில் அந்த எலுமிச்சம் பழத்தை நான் பார்க்கவே இல்லை. மந்திரம், தந்திரம் என்று கூறுவது சிரிப்புத்தான் வருகிறது என்றார்.

மறந்துட்டு போனது
உயர்நீதிமன்றத்தைச் சேர்ந்த ஒரு அதிகாரி கூறுகையில், அது வேறு ஒரு வக்கீல் மறந்து வைத்து விட்டுப் போன எலுமிச்சம் பழம். உள்ளே நாத்தம் தாங்காமல் முகர்ந்து பார்ப்பதற்காக வைத்திருந்துள்ளனர். அதை மறந்து விட்டுச் சென்றுள்ளனர். வேறு விசேஷம் அதில் இல்லை என்றார்.

செய்வினை
ஆனால் கர்நாடகத்திற்கும் பிளாக் மாஜிக் எனப்படும் மந்திர தந்திரத்திற்கும் நிறைய உறவு உண்டு. முன்பு எதியூரப்பா முதல்வராக இருந்தபோது விதான் செளதா முன்பு சிலர் எலுமிச்சம் பழத்தைப் போட்டுச் செந்றனர். இதற்கு மதச்சார்பற்ற ஜனதாதளம்தான் காரணம் என்று பாஜக குற்றம் சாட்டியது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications