டாட்டூவால் சிக்கிய நண்பனை கொன்று நாடகமாடிய நபர்
இந்தூர்: மத்திய பிரதேசத்தில் டாட்டூவை வைத்து போலீசார் கொலைக் குற்றவாளியை கைது செய்துள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பவ்சிங். இந்தூர் மத்திய சிறையில் இருந்த அவர் 15 நாட்கள் பரோலில் கடந்த 10ம் தேதி வெளியே வந்தார். அவர் தனது நண்பர் சுரேஷுக்கு(30) போன் செய்து உனக்கு திருமணத்திற்கு பெண் பார்க்க உஜைலியா கிராமத்திற்கு வா என்று அழைத்துள்ளார்.
உஜைலியாவுக்கு கடந்த 18ம் தேதி வந்த சுரேஷை பவ்சிங் தலையில் கல்லால் அடித்து கொன்று அவரது தலையை அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைத்துவிட்டார். பின்னர் தான் பரோலில் வந்த ஆவணங்கள் மற்றும் தனது அடையாள அட்டையை சுரேஷின் பாக்கெட்டில் வைத்துவிட்டார். போலீசார் வந்தால் கொலை செய்யப்பட்டது தான் தான் என்று நம்பும் அளவுக்கு பவ்சிங் செயல்பட்டார்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றினர். முதலில் அவர் பவ்சிங் என்று நினைத்த போலீசாருக்கு சடலத்தின் கையில் சுரேஷ் என்று எழுதப்பட்ட டாட்டூவை பார்த்து சந்தேகம் எழுந்தது. இதையடுத்து போலீசார் பவ்சிங்கின் குடும்பத்தாரை தொடர்பு கொண்டு சடலத்தை அடையாளம் காட்டுமாறு கூறினார்கள். அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்ததோடு பவ்சிங் எங்கிருக்கிறார் என்று தங்களுக்கு தெரியாது என்று கூறினர்.
பின்னர் பவ்சிங்கின் செல்போன் அழைப்புகள் குறித்து விசாரணை நடத்தியபோது அதில் இருந்த பிரகாஷ் என்பவரின் எண்ணில் தொடர்பு கொண்டு போலீசார் பேசினர். அவர் வந்து உடலை பார்த்து அது தன் தம்பி சுரேஷ் என்று அடையாளம் காட்டினார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பவ்சிங்கை செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications