நகரங்களில் மட்டுமல்ல, கிராம பஞ்சாயத்துகள் தேர்தலிலும் தெலுங்கு தேசம் அபார வெற்றி
ஹைதராபாத்: சீமாந்திராவில் நடந்த நகராட்சி தேர்தல்களில் பெருவாரியாக வெற்றிபெற்ற தெலுங்கு தேசம் தற்போது கிராம பஞ்சாயத்து தேர்தல்களிலும் அபார வெற்றி பெற்றுள்ளது.
ஆந்திர மாநிலம் தெலுங்கானா, சீமாந்திரா என வரும் ஜூன் 2ம்தேதி பிரிக்கப்பட உள்ளது. முன்னதாகவே அங்கு பிராந்தியவாரியாக நாடாளுமன்ற மற்றும் சட்டசபை தேர்தல்கள் நடத்தப்பட்டுவிட்டன. இங்கு நடத்தப்பட்ட உள்ளாட்சி தேர்தல் முடிவுகளும் இப்போது வெளியாக தொடங்கியுள்ளன. சில தினங்களுக்கு முன்பு நகராட்சிகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் பாஜக கூட்டணியிலுள்ள சந்திரபாபு நாயுடுவின், தெலுங்கு தேசம் அதிக நகராட்சிகளை கைப்பற்றியது.
கடந்த மாதம் நடந்த ஜில்லா பரிசத், மண்டல் பரிசத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்று தொடங்கி இன்று வரை நடந்தது. ரிசல்ட் இன்று அறிவிக்கப்பட்டது. அதில் சீமாந்திரா பகுதியிலுள்ள 13 மாவட்டங்களில் 9 மாவட்ட பஞ்சாயத்துகளை தெலுங்கு தேசம் கைப்பற்றியுள்ளது. 4 இடங்களை ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. போட்டியிட்ட அனைத்து பஞ்சாயத்துகளிலும் காங்கிரஸ் தோல்வியே அடைந்தது.
அதே நேரம் தெலுங்கானாவில் தெலுங்கானா ராஷ்டிரிய சமித்தி 3 மாவட்ட பஞ்சாயத்துகளையும், காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் தலா 1 மாவட்ட பஞ்சாயத்துகளையும் கைப்பற்றியுள்ளன. சீமாந்திராவில் கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் தெலுங்கு தேசத்துக்கு சரிசமமாக ஆதரவு உள்ளதாக அக்கட்சி தலைவர்கள் பெருமிதம் தெரிவித்ததுடன், இம்முடிவுகள் நாடாளுமன்ற மற்றும் சட்டசபை தேர்தல்களிலும் எதிரொலிக்கும் என்று கூறினர்.












Click it and Unblock the Notifications