காலையில் மாணவர்களுக்கு பாடம்... மாலையில் திருமணம்- கடமை தவறாத ஒரு அசத்தல் மணமகள்!
பாட்னா: பீகாரில் ஆசிரியராக இருக்கும் பெண் ஒருவர் கடமை உணர்வுடன் காலையில் பள்ளிக்கு சென்று மாணவர்களுக்கு பாடம் எடுத்துவிட்டு மாலை திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம், சரன் மாவட்டம் லக்லாத்புர் தொகுதியில் உள்ள லஷ்கரிபுர் கிராமத்தில் உள்ளது அரசு ஆரம்ப உருது பள்ளி. தலைநகர் பாட்னாவில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இது.

இந்தப் பள்ளியில் டாடாகிர் பாத்திமா என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் பாட்னாவை சேர்ந்த சையது ஜாபர் என்பவருக்கும் கடந்த சனிக்கிழமை மாலை திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் அன்று மாலையில் திருமணம் நடைபெறவிருந்த நிலையில் காலையில் பள்ளியில் இருந்து பாத்திமாவுக்கு அழைப்பு வந்தது. திருமணம் என்றும் பாராமல் கடமை தான் முக்கியம் என்று அவர் பள்ளிக்கு கிளம்பி விட்டார். பின்னர் பள்ளி முடிந்து மாலையில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அதேபோல் மறுநாள் ஞாயிறன்று பாத்திமாவிற்கு வழி அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது. அன்றும் காலையில் பள்ளிக்கு சென்று மாணவர்களுக்கு பாடம் எடுத்துள்ளார். திருமணத்திற்காக அதிக நாள் விடுமுறை எடுக்க தனக்கு விருப்பம் இல்லை என்றும் மாணவர்களுக்கு பாடம் நடத்தவே முக்கியத்துவம் அளிப்பேன் என்றும் பாத்திமா கூறினார். இச்சம்பவத்தால் பாத்திமாவிற்கு பராட்டுகள் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications