ஆர்கே நகர் தேர்தல்: ஓபிஎஸ் அதிமுகவுக்கு இரட்டை விளக்கு மின்கம்பம்!
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் ஓபிஎஸ் அதிமுகவுக்கு இரட்டை விளக்கு மின்கம்பம் ஒதுக்கப்பட்டுள்ளது.
டெல்லி: ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் ஓபிஎஸ் அதிமுகவுக்கு இரட்டை விளக்கு மின்கம்பம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
1987-ல் எம்ஜிஆர் மறைவின் போது அதிமுக இரண்டாக உடைந்தது. இதனால் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது.
இரட்டை புறா, சேவல்
அப்போது எம்ஜிஆர் மனைவி ஜானகி அணி தங்களது அணிக்கு இரட்டை புறா சின்னத்தை பெற்றது. ஜெயலலிதா அணி சேவல் சின்னத்தை கேட்டுப் பெற்றது.
மீண்ட இரட்டை இலை
ஆனால் சேவலிடம் இரட்டை புறா படுதோல்வி அடைந்தது. இதையடுத்து அரசியலுக்கே முழுக்குப் போட்டுவிட்டு ஜானகி அணி ஒதுங்க அதிமுகவின் இரட்டை இலை சின்னம் தானாகவே ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவுக்கு வந்தது.
தேர்தல் ஆணையம் முடக்கம்
தற்போது ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுக இரண்டாக பிளவுபட்டுள்ளது. தேர்தல் ஆணையம் அதிமுக பெயர், கொடி, சின்னமான இரட்டை இலை ஆகியவற்றை மீண்டும் முடக்கி வைத்துள்ளது.
புதிய சின்னம்
இதையடுத்து சசிகலா அதிமுக ஆட்டோர் ரிக்ஷா, தொப்பி, கிரிக்கெட் சின்னம் கோரியது. ஓபிஎஸ் அதிமுக இரட்டை விளக்கு மின்கம்பம், இரட்டை விளக்கு ஆகிய சின்னங்களை கோரியது.
இரட்டை விளக்கு மின்கம்பம்
தற்போது ஓபிஎஸ் அணிக்கு "அதிமுக புரட்சித் தலைவி அம்மா" என்ற பெயரையும் அந்த அணிக்கு இரட்டை விளக்கு மின்கம்பம் சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது. சசிகலா அணிக்கு அதிமுக அம்மா என்ற பெயரும் தொப்பி சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது.