ஹைதராபாத்தில் பயங்கரம்.. சாப்ட்வேர் என்ஜீனியரை கடத்திப் பலாத்காரம் செய்த 2 டிரைவர்கள்
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவரை 2 டாக்சி டிரைவர்கள் பாலியல் பலாத்காரம் செய்தது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
23 வயதான அந்தப் பெண்ணைக் கடத்திச் சென்று பலாத்காரம் செய்துள்ளனர். முன்னணி ஐடி நிறுவனத்தில் அந்தப் பெண் பணியாற்றி வருகிறார்.

அந்தப் பெண் ஹைதராபாத்தில் உள்ள இன்ஆர்பிட் மால் வளாகத்திலிருந்து கடத்தப்பட்டுள்ளார். இந்த சம்பவம் திங்கள்கிழமை நடந்துள்ளது. ஆனால் செவ்வாய்க்கிழமைதான் வெளியில் தெரிய வந்துள்ளது.
அன்றைய தினம் இரவு எட்டரை மணியளவில் வால்வோ கார் ஒன்றில் இப்பெண்ணை அவர்கள் கடத்தியுள்ளனர். கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் நகரின் பல்வேறு பகுதிகள் வழியாக போயுள்ளனர். பின்னர் ஓபன் மைன்ட் பிர்லா பள்ளி அருகே வைத்து பலாத்காரம் செய்துள்ளனர்.
பின்னர் அப்பெண்ணை அவர் தங்கியிருந்த ஹாஸ்டல் அருகே அதிகாலை இரண்டரை மணியளவில் விட்டுச் சென்றுள்ளனர்.
2 மாதங்களுக்கு முன்புதான் அப்பெண் ஹைதராபாத்துக்கு பணிக்காக வந்துள்ளார். அவருக்கு நகரம் புதிது. வந்த இடத்தில் இப்படி ஒரு அசம்பாவிதத்தைத் சந்தித்துள்ளார் அப்பெண்.

இந்த ஆறு மணி நேர துயரச் சம்பவத்தின்போது குற்றவாளிகள் பயன்படுத்திய கார், 2 டோல்கேட்களையும் தாண்டிப் போயுள்ளது. இத்தனைக்கும் மாதாபூர் போலீஸில் அப்பெண்ணின் நண்பர்கள் புகார் கொடுத்தும் போலீஸார் சோதனைச் சாவடியில் வாகன சோதனையில் ஈடுபடாதது கேள்விகளை எழுப்பியுள்ளது.
இரு குற்றவாளிகளும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் கமிஷனர் சி.வி.ஆனந்த் கூறுகையில், சதீஷ், வெங்கடேஸ்வரலு ஆகிய இரு டிரைவர்கள்தான் இந்த குற்றத்தைச் செய்துள்ளனர் என்று தெரிய வந்துள்ளது. இதுபோல பல சம்பவங்களில் அவர்களுக்குத் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது என்றார்.












Click it and Unblock the Notifications