அணையில் செல்ஃபி எடுக்கையில் நீரில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி, காப்பாற்ற முயன்ற நண்பரும் பலி
நாசிக்: மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள வால்தேவி அணையில் செல்ஃபி எடுக்கையில் நீரில் தவறி விழுந்து 18 வயது வாலிபர் பலியானார். அவரை காப்பாற்ற நீரில் குதித்த நண்பரும் பலியானார்.
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டம் கோட்டி அருகே உள்ளது வால்தேவி அணை. நாசிக்கில் உள்ள சிட்கோ பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் சவுரப் ஜெகன்னாத் சுல்பார்(18) மற்றும் அவரது நண்பர் அஜிங்கியா பாவ்சாஹெப் கெய்கர்(18) உள்பட 10 பேர் வால்தேவி அணைக்கு நேற்று சுற்றுலா சென்றனர்.
அணையில் நின்று சவுரப் செல்ஃபி எடுத்தார். செல்ஃபி எடுக்கையில் அவர் கால் தவறி அணையில் விழுந்தார். நண்பர் நீரில் விழுந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அஜிங்கியா அவரை காப்பாற்ற நீரில் குதித்தார்.
ஆனால் சவுரப் மற்றும் அஜிங்கியா ஆகிய இருவருமே நீரில் மூழ்கி பரிதாபமாக பலியாகினர். உள்ளூர் மக்கள் மீனவர்களின் உதவியோடு அந்த இருவரின் உடலையும் மீட்டனர். மீட்கப்பட்ட உடல்கள் பிரேத பரிசோதனைக்காக நாசிக் சிவில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
செல்ஃபி எடுக்கப் போய் இரண்டு வாலிபர்கள் பலியாகியுள்ளது அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.