தருண் தேஜ்பாலுக்கு 6 நாள் போலீஸ் காவல்
பனாஜி: டெஹல்கா நிறுவனர் தருண் தேஜ்பாலுக்கு கோவா கோர்ட் 6 நாள் போலீஸ் காவலை அனுமதித்து உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து தேஜ்பாலை கோவா போலீஸார் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். இன்று பிற்பகலில் கோவா நீதித்துறை நடுவர் ஷாமா ஜோஷி முன்பு தேஜ்பாலை போலீஸார் ஆஜர்படுத்தி போலீஸ் காவலுக்கு அனுமதி கோரி மனு செய்தனர்.
அதை விசாரித்த கோர்ட், 6 நாள் காவலை அனுமதித்து உத்தரவிட்டது. தனது நிறுவனத்தில் பணியாற்றி வந்த பெண் பத்திரிக்கையாளரிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்ததாக தேஜ்பால் மீது புகார் எழுந்தது. இதையடுத்து கோவா போலீஸார் அவர் மீது பாலியல் பலாத்கார முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர்.
இதையடுத்து கோவா வந்த அவரை விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்தனர். அவரது முன்ஜாமீன் மனுவை கோவா கோர்ட் ஏற்கனவே நிராகரித்து விட்டது.

தேஜ்பாலுக்கு இன்று போலீஸ் காவல் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து முதலில் அவருக்கு கோவா மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. அதன் பின்னர் அவர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.
போலீஸ் விசாரணையின்போது ஒரு நாளைக்கு ஒருமுறை தனது வக்கீலுடன் தேஜ்பால் ஆலோசனை நடத்திக் கொள்ளவும் கோர்ட் அனுமதித்துள்ளது. மேலும் அவருக்கு விசாரணைக் காலத்தில் வீட்டுச் சாப்பாடு தரவும் கோர்ட் அனுமதித்துள்ளது.












Click it and Unblock the Notifications