தெலுங்கானா: நொடிக்கு நொடி டென்சன்... துப்பாக்கிச் சூடு... ஜெகன் உண்ணாவிரதம்
ஹைதராபாத்: ஆந்திராவை பிரித்து தனித்தெலுங்கானா மாநிலம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சீமாந்திராவின் 13 மாவட்டங்களில் நடைபெறும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளனர்.
விசாகப்பட்டிணத்தில் மாணவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் பலர் காயமடைந்தனர் இதனால் நொடிக்கு நொடி டென்சன் அதிகரித்து வருகிறது.
மாநில பிரிவினைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி நாளை முதல் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கப்போவதாக அறிவித்துள்ளார்.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு
தெலுங்கானா மாநிலம் உருவாக்கத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதையடுத்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்போவதாக காங்கிரஸ் எம்.பி., ராஜகோபால் தெரிவித்துள்ளார். தெலுங்கானா தனிமாநில உருவாக்கத்திற்கு காங்கிரஸ் அரசு தீவிர முயற்சி எடுத்துவரும் வேளையில், அக்கட்சியைச் சேர்ந்த எம்.பி.யே இவ்வாறு கூறியுள்ளார்.

கொதித்த மாணவர்கள்
விசாகப்பட்டிணத்தில் மாணவர்கள் மத்திய அரசு அலுவலகங்களுக்கு தீவைக்க முயன்றனர். இதனையடுத்து அவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் பலர் காயமடைந்தனர். விஜயவாடாவில் மாணவர்கள் பலர் லாரிகளுக்கு தீவைத்தனர். சீமாந்தராவில் உள்ள எம்.பி.க்கள்., எம்.எல்.ஏக்கள் வீடுகளை முற்றுகையிட்டு மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஜெகன் உண்ணாவிரதம்
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி நாளை முதல் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கப்போவதாக அறிவித்துள்ளார். மேலும் வாக்கு வங்கிக்காக ஆந்திராவை மத்திய அரசு பிரிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டி உள்ளார்.

பல்லம் ராஜூ ராஜினாமா
ஆந்திராவில் தெலுங்கானாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய அமைச்சர்கள் நான்கு பேர் நேற்று தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இந்நிலையில் மத்திய அமைச்சர் பல்லம் ராஜூ தனது ராஜினாமா கடிதத்தினை பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு அனுப்பி வைத்தார்.அதில் தெலுங்கானா பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சரவையில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

சட்டசபையில் எதிர்ப்பு
தெலங்கானா தனி மாநில உருவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒருங்கிணைந்த ஆந்திராவை வலியுறுத்தும் காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒருங்கிணைப்பாளரும் மாநில கல்வி அமைச்சருமான சைலஜாநாத், தனி தெலங்கானாவுக்கான மசோதா ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்தில் கொண்டுவரப்படும்போது அதனை கடுமையாக எதிர்க்கப்போவதாகத் தெரிவித்துள்ளார்.

இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ஐக்கிய ஆந்திராவை வலியுறுத்தும் அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ள இந்த முழு அடைப்புப் போராட்டத்தால், கடலோர ஆந்திரா, ராயலசீமா உள்ளிட்ட பகுதிகளில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடியே காணப்படுகின்றன. பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. பேருந்துகளும் பெருமளவில் இயக்கப்படவில்லை. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.

72 மணிநேர போராட்டம்
இந்த முழு அடைப்புப் போராட்டம் 2 நாட்களுக்கு நடைபெறும் என்று சீமாந்திரா பகுதி வழக்கறிஞர் சங்கம் அறிவித்துள்ள நிலையில், 72 மணிநேர முழு அடைப்புப் போராட்டத்திற்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி அழைப்பு விடுத்துள்ளார். இதனால் போராட்டம் மேலும் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திருப்பதி பிரம்மோற்சவம்
நாளைய தினம் திருப்பதியில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்க உள்ள நிலையில் இந்த போராட்டத்தினால் திருப்பதி செல்லும் பக்தர்கள் பேருந்து வசதியில்லாமல் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனால் கோவில் வளாகப்பகுதி பக்தர்கள் கூட்டமின்றியும் வழக்கமான உற்சாகமின்றியும் களையிழந்து காணப்படுகிறது.












Click it and Unblock the Notifications