விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கும் தயாநிதி மாறனை கைது செய்ய வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ.
டெல்லி: சட்டவிரோத எக்சேஞ்ச் வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதால் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனை கைது செய்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் சி.பி.ஐ. கோரிக்கை விடுத்துள்ளது.
2004- 2007ஆம் ஆண்டு காலகட்டத்தில் தயாநிதி மாறன் மத்திய அமைச்சராக இருந்தபோது, 700-க்கும் மேற்பட்ட தொலைபேசி இணைப்புகளை முறைகேடாக பெற்று சன் டி.வி.க்கு பயன்படுத்தினார் என்பது வழக்கு. இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணையில் இருந்து வருகிறது.

இதில் தயாநிதி மாறனை கைது செய்ய இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ்.தாக்கூர், கோபால கவுடா முன்பாக அண்மையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது தயாநிதி மாறன் சார்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. தயாநிதி மாறன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, அமைச்சர் என்ற முறையில் சேவை இணைப்புகள் பெற தயாநிதி மாறனுக்கு உரிமை இருந்தது. அதன் அடிப்படையில் தான் அவர் இணைப்புகள் பெற்றார். அவருக்கு முன்பிருந்த அமைச்சர்களும் சேவை இணைப்புகள் பெற்றுள்ளனர். இதில் சட்ட விதிமீறல் எதுவும் இல்லை என்று வாதிட்டார்.
மேலும் தயாநிதி தாக்கல் செய்துள்ள புதிய மனுவை படித்துப் பார்த்து பதிலளிக்க அவகாசம் வழங்குமாறு அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்கி கோரிக்கை விடுத்தார். இதனைத் தொடர்ந்து சி.பி.ஐ.க்கு 2 வார கால அவகாசம் கொடுத்தது உச்சநீதிமன்றம். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. அப்போது தயாநிதி மாறன் தரப்பு வழக்கறிஞர் ஆஜராகததால் விசாரணையை இன்றைக்கு உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்திருந்தது.
இன்றைய விசாரணையின் போது சி.பி.ஐ. தரப்பில் முதலாவது பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், தயாநிதி மாறனுக்கு எதிரான ஆதாரங்கள் உள்ளன. அவர் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்துவருவதால் கைது செய்து கஸ்டடியில் வைத்து விசாரிக்க வேண்டியுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சி.பி.ஐ.-ன் இந்த பிரமாண பத்திரம் மீது பதிலளிக்குமாறு தயாநிதி மாறனுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை நவம்பர் 27-ந் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.












Click it and Unblock the Notifications