சாலையில் ஈவ்டீசிங் செய்த இளைஞர்களை பேஸ்புக் மூலம் போலீசில் மாட்டவைத்த நடிகை!
ஹைதராபாத் : காரில் சென்ற போது ஈவ்டீசிங் செய்த இரண்டு இளைஞர்களை புகைப்படம் எடுத்து, அதனை பேஸ்புக்கில் வெளியிட்டு அவர்களைப் போலீசில் சிக்க வைத்துள்ளார் தெலுங்கு நடிகை அஸ்மிதா கர்னானி.
தெலுங்கு நடிகை அஸ்மிதா கர்னானி. இவர் சில தினங்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் தன்னுடைய காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த சாலையில் பைக்கில் சென்ற இரண்டு இளைஞர்கள் அஸ்மிதாவை நோக்கி ஆபாச செய்கைகள் செய்துள்ளனர். அஸ்மிதாவின் காரை வழிமறிக்க முயன்று, தொடர்ந்து தொல்லை கொடுத்துள்ளனர்.

இளைஞர்களின் ஈவ்டீசிங்கை பொறுத்துக் கொண்டு காரை ஓட்டிச் சென்ற அஸ்மிதா, சாமர்த்தியமாக செயல்பட்டு, அந்த இருவரையும், அவர்கள் வந்த வண்டியின் பதிவு எண்களையும் தனது போன் மூலம் புகைப்படம் எடுத்துக்கொண்டார். பின்னர் அந்த புகைப்படங்களை தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்தார்.
அதை அனைவரையும் பகிர்ந்து, அந்த இருவரையும் பேஸ்புக்கில் பிரபலப்படுத்துங்கள் என்று அவர் கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்று 10 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் இந்த புகைப்படங்களை பகிர்ந்தார்கள்.

மேலும் போக்குவரத்து காவல்துறையின் பேஸ்புக் பக்கத்திற்கும் அஸ்மிதா இணைப்பு கொடுத்திருந்தார். இதை தொடர்ந்து போக்குவரத்து காவல்துறையினர், புகைப்படத்தில் இருந்த பைக்கின் பதிவு எண்ணை வைத்து ஈவ்டீசிங் செய்த இரண்டு இளைஞர்களையும் அடையாளம் கண்டனர். பின்னர் அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
அஸ்மிதாவின் சாமர்த்தியமான நடவடிக்கையால் ஈவ்டீசிங் செய்த இரண்டு இளைஞர்களும் உடனடியாக கைது செய்யப் பட்டுள்ளனர். அஸ்மிதாவின் தைரியம் மற்றும் புத்திசாலித்தனத்தை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications