ரோஜா மீதான ரூ 100 கோடி புகார் ஒரு பக்கம்! ஜெகன் மோகன் ரெட்டியின் ரூ 500 கோடி ரகசிய அரண்மனையை பாருங்க
அமராவதி: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியால் கட்டப்பட்ட ரகசிய மாளிகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக புதிதாக பதவியேற்ற தெலுங்கு தேசம் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
ஆந்திராவின் தலைநகராக விசாகப்பட்டினத்தை அறிவித்த ஜெகன் மோகன் ரெட்டி, அங்கு ருஷிகொண்டா ஹில்ஸில் ஒரு சொகுசு மாளிகையை கட்டியுள்ளார் என தெலுங்கு தேசம் கட்சி பரபரப்பு குற்றச்சாட்டை அளித்துள்ளது.

இதுகுறித்து தெலுங்கு தேசம் கட்சி தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது: ருஷிகொண்டா அரண்மனைதான் நாட்டின் மிகவும் சொகுசு அரண்மனை ஆகும். மக்களின் வரிப்பணமான ரூ 500 கோடியில் ஜெகன் மோகன் ரெட்டி கட்டியுள்ளார். இதற்கு யார் அனுமதி கொடுத்தது? இது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என மக்கள் கூறுகிறார்கள்.
ருஷிகொண்டா அரண்மனை சம்பவத்தை வைத்தே ஜெகன் மோகன் ரெட்டி தோல்வியடைய மக்கள் எத்தனை நன்மை செய்துள்ளார்கள் என்பது தெரிகிறது. விசாகப்பட்டினத்தில் ஒரு மலையில்ஆக்கிரமிக்க ஜெகன் எத்தனை முயற்சிகளை மேற்கொண்டுள்ளார் பாருங்கள். அதுவும் ரூ 500 கோடி மக்களின் வரிப்பணம்!

அந்த மாளிகையில் பாத்டப் மட்டுமே ரூ 26 லட்சமாகும். ஜெகன் மோகன் ரெட்டியின் மனைவியின் விருப்பத்திற்காக கடற்கரையை பார்த்தபடி வடகிழக்கில் ரூ 500 கோடியில் மாளிகையை கட்டியுள்ளார். ஏழைகள் ஏழைகளாகவும் பிச்சைக்காரர்களாகவும் இருக்க வேண்டும் என எண்ணியுள்ளார்.
அவருடைய மனைவி கேட்டதால்தான் அனைத்து விதிகளையும் மீறி நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் பணத்தை வீணடித்துள்ளார். மாளிகை முழுவதும் இத்தாலியன் மார்பிள் மற்றும் டைல்ஸ் பயன்படுத்தியுள்ளார். இத்தாலியன் மார்பிள்களின் ஒரு அடி விலையில் ஒரு சிறிய அளவிலான அப்பார்ட்மென்ட்டை நடுத்தர வர்க்கத்தினர் வாங்கும் அளவுக்கு விலை மதிப்புடையது.

அரண்மனைகளில் பயன்படுத்தும் பொருட்களை கொண்டு இந்த மாளிகை கட்டப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி குடிவடா அமர்நாத் கூறுகையில், ஆந்திர மாநில மக்களை தெலுங்கு தேசம் கட்சி தவறாக வழிநடத்துகிறது. வருங்காலங்களில் விசாகப்பட்டினத்திற்கு ஆளுநர், குடியரசுத் தலைவர் மற்றும் முக்கிய பிரதிநிதிகள் வந்தால் இந்த மாளிகையை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து தெலுங்கு தேசம் கட்சிக்கு யோசிக்க தெரியவில்லை.
அதை விட்டுவிட்டு இதை ஜெகன் மோகன் ரெட்டியின் வீடு என கூறி வருகிறார்கள். ருஷிகொண்டாவில் உள்ள கட்டடங்கள் அரசுக்கு சொந்தமானவை, தனி நபருக்கானது அல்ல. விசாகப்பட்டினத்தை தலைநகராக்கும் எண்ணத்தில்தான் இந்த கட்டடம் கட்டப்பட்டது. இந்த அரசு கட்டடங்கள் எதற்கு என்பது மக்களுக்கு தெரியும்.
யோசித்து பாருங்கள் விசாகப்பட்டினத்திற்கு பிரதமரோ, ஜனாதிபதியோ ஆளுநரோ வந்தால் அவர்களை எந்த கட்டடத்தில் தங்க வைப்பீர்கள். அவர்கள் தங்க ஏதேனும் கட்டடம் இருக்கிறதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு தெலுங்கு தேசம் கட்சி அளித்த பதிலடியில் அரசு கட்டடங்கள் என்றால் அதை ஏன் மறைத்து வைக்க வேண்டும். பிரதமர், ஜனாதிபதி, தங்குவதற்கான கட்டடம் என்றால் எதற்காக கட்டடத்தை சுற்று முள்வேலி அமைக்க வேண்டும்? மக்களிடம் இருந்து இந்த மாளிகையை எதற்காக மறைத்து வைத்தீர்கள்.
இவை சுற்றுலா கட்டடங்கள் என ஏன் சொல்கிறீர்கள். இது பிரதமர், ஜனாதிபதி தங்குவதற்கான மாளிகை என்றால் அங்கு ஜெகன் மோகன் ரெட்டியின் உறவினர்கள், அவருடைய மனைவி செல்வது ஏன்? இந்த இடம் 9.9 ஏக்கர் பரப்பளவு கொண்டது என தெலுங்கு தேசம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications