ரூ. 9,000 கோடி கடற்படை ஹெலிகாப்டர் கொள்முதல் ரத்து- இந்தியாவிலேயே தயாரிக்க முடிவு!
டெல்லி: இந்தியக் கடற்படைக்காக வாங்க இருந்த 9 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெலிகாப்டர் டெண்டர் ரத்து செய்யப்பட்டு, இந்தியாவிலேயே அதைத் தயாரிக்க தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.
வெளிநாட்டு தொழில்நுட்ப ஒத்துழைப்புடன் இந்தியாவில் இந்த ஹெலிகாப்டர்களை தற்போது கடற்படையே தயாரிக்கவுள்ளது. சமீப காலத்தில் ரத்து செய்யப்பட்டுள்ள 3வது பாதுகாப்புத்துறை டெண்டராகும் இது.
ஏற்கனவே ரூ. 3600 கோடியில் விவிஐபிக்களுக்கான ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தை, ஆங்கிலோ இத்தாலிய நிறுவனமான அகஸ்டாவெஸ்ட்லேன்ட் நிறுவனத்துடன் ஏற்படுத்தியிருந்துத மத்திய அரசு. ஆனால் இதில் பெருமளவில் லஞ்சம் கைமாறியதாக சர்ச்சை வெடித்தது. இதையடுத்து இந்த ஒப்பந்தம் கைவிடப்பட்டது.
தற்போது இந்த ஹெலிகாப்டர்களை உள்ளூரில் உள்ள நிறுவனங்கள் மூலமாக, வெளிநாட்டுத் தொழில்நுட்ப ஒத்துழைப்புடன் இங்கேயே தயாரிக்க மத்திய பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
ரூ. 9000 கோடி மதிப்புள்ள ஹெலிகாப்டர் கொள்முதல் போட்டியில், ஐரோப்பிய ஏர்பஸ் ஹெலிகாப்டர்ஸ் மற்றும் அகஸ்டாவெஸ்ட்லேன்ட் ஆகிய இரு நிறுவனங்களும் இருந்து வந்தன என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களுக்கு தற்போது டெண்டர் ரத்தான விவரம் தெரிவிக்கப்பட்டு விட்டது.
இந்திய கடற்படை தற்போது சீட்டா, சேடக் ஆகிய ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தி வருகிறது. சீட்டா, சேடக் ஹெலிகாப்டர்கள் கடந்த 35 வருடமாக பயன்பாட்டில் இருந்து வருகிறது. இவற்றை மாற்றி விட்டு அவற்றுக்குப் பதில் 56 புதிய ஹெலிகாப்டர்களை வாங்க கடற்படை தீர்மானித்தது. இதுதொடர்பாக 2 ஆண்டுகளுக்கு முன்பு டெண்டர் விடப்பட்டது.