தீவிரவாதி ஆனதன் பின்னணி... மூன்றரை மணி நேரம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்த பாகிஸ்தான் தீவிரவாதி
ஜம்மு : பாதுகாப்பு படை வீரர்களிடம் சிக்கிய பாகிஸ்தான் தீவிரவாதி முகமது நவீத் தான் தீவிரவாதியானதன் பின்னணி, குடும்ப விவரம் குறித்து நீதிபதியிடம் சுமார் மூன்றரை மணி நேரம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளான்.
காஷ்மீரில் உதம்பூரில் கடந்த 5-ந் தேதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த துணை ராணுவத்தினரின் வாகனங்கள் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். கையெறி குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சரமாரியாக சுட்டும் நடத்திய தாக்குதலில் 2 வீரர்கள் பலியாகினர்.

தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் இருவரில் ஒருவன் உயிரோடு பிடிபட்டான். அவனது பெயர் முகம்மது நவீத் என்பதும் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவன் என்பதும் தெரியவந்தது. அவனிடம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் 15 நாட்கள் விசாரணை நடத்தினர்.
கடந்த 24-ந் தேதி முகமது நவீத், ஜம்மு தலைமை குற்றவியல் நடுவர்மன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது, நீதிமன்றத்தில் தான் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்க விரும்புவதாக அவன் உருது மொழியில் எழுதி கொடுத்தான். அதை நீதிபதியும் ஏற்றுக்கொண்டார்.
அதன்படி முகமது நவீத் ஒப்புதல் வாக்குமூலம் வழங்குவதற்காக பலத்த பாதுகாப்புடன் இன்று பிற்பகல் அவன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டான். மாலை 4.30 மணி வரை அவன் மூன்றரை மணி நேரம் தொடர்ந்து ஒப்புதல் வாக்குமூலம் அளித்தான். அதை மாஜிஸ்திரேட்டு பதிவு செய்தார்.
இந்த ஒப்புதல் வாக்குமூலத்தில் அவன் தனது குடும்ப பின்னணி, தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்து பயிற்சி பெற்றது, தீவிரவாத தாக்குதல்களில் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் பங்கு, உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விரிவாக தெரிவித்ததாக தகவல்கள் கூறுகின்றன.












Click it and Unblock the Notifications