டெல்லி டூ காபூல் செல்லும் ஏர் இந்தியா விமானம் கடத்தப்படலாம்: உளவுத்துறை
டெல்லி: டெல்லியில் இருந்து காபூல் செல்லும் ஏர் இந்தியா விமானம் கடத்தப்படலாம் என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
டெல்லியில் இருந்து காபூல் செல்லும் விமானம் தீவிரவாதிகளால் கடத்தப்படலாம் என்றும், அதிலும் குறிப்பாக ஏர் இந்தியா விமானம் கடத்தப்படலாம் என்றும் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஊழியர்கள் முதல் பயணிகள் வரை அனைவரையும் தீவிர சோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனால் அந்த விமான நிலையத்தில் சோதனைக்கு கூடுதல் நேரம் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கமாண்டோக்கள் விமான நிலையத்தை ஒட்டியுள்ள இடங்களில் ரோந்து செல்வார்கள். விமானத்தில் ஏதாவது பிரச்சனைக்குரிய, சந்தேக்கத்திற்குரிய பயணிகளை கண்டால் உடனே தகவல் கொடுக்குமாறு விமான ஊழியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
முன்னதாக கடந்த 1999ம் ஆண்டு காத்மாண்டுவில் இருந்து கிளம்பிய ஏர் இந்தியா விமானத்தை தீவிரவாதிகள் கடத்தி ஆப்கானிஸ்தானில் உள்ள கந்தஹாருக்கு கொண்டு சென்றனர். இந்நிலையில் தான் ஏர் இந்தியா விமானத்தை தீவிரவாதிகள் கடத்தக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியா வரும் வேளையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications