பிரதமர் இல்லம், நாடாளுமன்றத்தை தாக்க தீவிரவாதிகள் திட்டம்: உஷார் நிலையில் டெல்லி
டெல்லி: டெல்லியில் உள்ள பிரதமர் இல்லம், நாடாளுமன்றம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டுமிட்டுள்ளனர் என உளவுத் துறை எச்சரித்துள்ளது. இதையடுத்து டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
டெல்லி சட்டசபை தேர்தல் வரும் 7ம் தேதி நடக்க உள்ளது. இதையொட்டி பாஜக, ஆம் ஆத்மி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் பிரதமர் இல்லம், நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர் என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தாக்குதல் நடத்த ஏதுவாக தற்கொலைப்படை தீவிரவாதிகள் ஏற்கனவே டெல்லிக்கு வந்து பதுங்கியிருப்பதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து டெல்லியில் காவல் துறையினர் மற்றும் துணை ராணுவத்தினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
முன்னதாக குடியரசு தின விழாவில் கலந்து கொள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா வருகையையொட்டி டெல்லியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று கூறப்பட்டது. ஒபாமா இந்தியா வருவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு பாகிஸ்தான் இந்திய எல்லையில் உள்ள ராணுவ வீரர்களின் இடங்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லியில் தேர்தல் நடக்க உள்ள நிலையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று உளவுத்துறை எச்சரித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications