மும்பை: மனைவியை துண்டு துண்டாக வெட்டிக் ஃப்ரிட்ஜில் வைத்த கணவர் கைது
மும்பை: கள்ளக்காதல் பிரச்சினையால் மனைவி நான்கு துண்டுகளாக வெட்டி கொலை செய்த கணவரை தானே போலீசார் கைது செய்துள்ளனர். தானே, மிராரோடு, நட்சத்திரா டவர் என்ற அபார்ட்மென்டில் 14-வது மாடியில் வசித்து வருபவர் கிரிஷ் ஸ்ரீரங்க் போடே(வயது29). ஆட்டோ டிரைவரான இவருக்கு மதவந்தி(30) என்ற மனைவி உண்டு. இவர்களுக்கு குழ குடும்ப பிரச்சினை காரணமாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
செவ்வாய்கிழமையன்று கிரிஷ், தனது உறவினர் ஒருவருக்கு போன் செய்து, மனைவியை துண்டு, துண்டாக வெட்டி கொலை செய்துவிட்டேன், உடல் பாகங்களை வெளியே வீச வேண்டும். தனியாக இதனை செய்வதற்கு பயமாக உள்ளது என கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த நபர், உடனே மிராரோடு போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.
இதை தொடர்ந்து போலீசார் கிரிஷின் வீட்டிற்கு சென்றனர். அப்போது வீட்டில் இருந்த கிரிஷிடம் மதுவந்தி பற்றி விசாரித்தனர். ஆனால் அவர் பதற்றத்துடன் காணப்பட்டார் பதில் ஏதும் கூறவில்லை. போலீசார் வீட்டிற்குள் சென்று ஒவ்வொரு அறையாக சோதனை நடத்தினார்கள். அப்போது, குளியலறையில் இடுப்புக்கு கீழே ஒரு பெண்ணின் உடல் பாகம் ரத்தக்கறையுடன் இருந்தது. பிரிட்ஜில் தலை, கைகள், கழுத்தில் இருந்து இடுப்பு வரையிலான உடல் பாகங்கள் தனித்தனியாக அட்டைப்பெட்டிகளில் வைத்து கட்டி, பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தன. அவை அனைத்தும் மதுவந்தியின் உடல் பாகங்கள் என்பது தெரியவந்தது. அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் உடல் பாகங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அதன் பின்னர் போலீசார் கிரிசை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, மதுவந்தியை கொலை செய்து உடலை துண்டு, துண்டாக வெட்டி கூறுபோட்டதை ஒப்புக்கொண்டார். விசாரணையில் அவர் கூறியதாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
மதுவந்திக்கு வேறொரு வாலிபருடன் கள்ளத்தொடர்பு இருந்தது. நான் வேலைக்கு சென்ற பின்னர் அந்த வாலிபரை வீட்டிற்கு அழைத்து அவருடன் மதுவந்தி உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இந்த சம்பவம் எனக்கு சமீபத்தில் தெரியவந்தது. இதனால் அந்த வாலிபர் உடனான கள்ளத்தொடர்பை விட்டுவிடும்படி மதுமதியை எச்சரித்தேன். இருப்பினும் மதுமதி அந்த வாலிபருடனான தனது கள்ளக்காதலை துண்டிக்கவில்லை.
மனைவியின் கள்ளக்காதலால் நான் அவமானம் அடைந்தேன். எவ்வளவோ எடுத்துக்கூறியும் எனது பேச்சை கேட்காமல் மதுவந்தி தனது கள்ளக்காதலில் தீவிரமாக இருந்ததால் அவரை கொலை செய்ய திட்டமிட்டேன். சம்பவத்தன்று, வேலை முடிந்து வீட்டிற்கு வந்ததும், மதுமதியை கத்தியால் சரமாரியாக வெட்டினேன். இதில் படுகாயம் அடைந்த மதுவந்தி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார். பின்னர் தடயத்தை மறைப்பதற்காக அவளது உடலை 4 துண்டுகளாக வெட்டி கூறுபோட்டேன்.
அதில் 3 துண்டுகளை வீட்டில் உள்ள பிரிட்ஜில் அடைத்து வைத்தேன். மீதம் இருந்த ஒரு துண்டை குளியலறையில் மறைத்து வைத்தேன். இவ்வாறு அவர் போலீசாரிடம் கூறினார்.
கொலை தொடர்பாக கிரிஷ் கூறிய தகவல்கள் உண்மை தானா? அப்படியானால் அவரது கள்ளக்காதலன் யார்? அல்லது வேறு ஏதாவது காரணத்திற்காக மதுவந்தி கொலை செய்யப்பட்டாரா? என்பதை கண்டறிய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.